மொத்த தேசமும் ஸ்டன் ஆக.. 1 PM - 4:30 PM இடையே நடந்தது என்ன? தன்கர் மீது மோடிக்கு கோபம்? பின்னணி
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார். இது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவர் ஏன் திடீரென பதவி விலகினார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன.
முக்கிய அரசாங்க வட்டாரங்களின் தகவல்களின்படி, ஜெகதீப் தன்கரின் பதவி விலகலுக்கு நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கண்டனத் தீர்மானத்தை அவர் பரிசீலித்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சந்தேகம் தரும் சம்பவம்
நீதிபதி வர்மாவுக்கு எதிராக இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ராஜ்யசபாவின் அலுவுக் குழுவின் (Business Advisory Committee - BAC) நிகழ்ச்சி நிரலில் இது முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்கர் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை அலுவுக் குழு கூட்டத்தில் கொண்டு வந்து, அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு அதை எடுத்துக் கொள்வதாகக் கூறியது அரசாங்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிர்ச்சி தரும் விவகாரம்
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது அதிருப்தியைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்துள்ளனர். இதற்கு பதிலளித்த தன்கர், அரசாங்கத்திடமிருந்து அதிருப்தியை உணர்ந்ததாகவும், அதனால் விரைவில் பதவி விலக நேரிட்டதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. .
திங்களன்று இரண்டு அலுவுக் குழு கூட்டங்கள் நடைபெற்றன. முதல் கூட்டம் மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், மாலை 4.30 மணிக்கு குழு மீண்டும் கூடியபோது, அந்தத் தலைவர்கள் இருவரும் வரவில்லை. அவர்களுக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவையில் இருந்தார்.
அன்று மாலையே தன்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். உடல்நலக் காரணங்களுக்காக அவர் பதவி விலகுவதாகக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அன்று அலுவுக் குழு கூட்டத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றிருந்த நிலையில், அவரது இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மோடிக்கு என்ன கோபம்
அவர் இன்று ராஜ்யசபா நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. அவர் பிரியாவிடை உரையும் நிகழ்த்த மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல்வேறு பொறுப்புகளில், குறிப்பாக இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும், அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவும் கூட கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்துதான். 12 மணி நேரமாக தன்கர் பற்றி மோடி எந்த போஸ்டும் செய்யாமல் இருந்தார் .. அப்படி மோடிக்கு தன்கர் மீது என்ன கோபம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது .
இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தன்கரின் ராஜினாமாவுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் காலவரிசையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். நட்டா மற்றும் ரிஜிஜு வேண்டுமென்றே இரண்டாவது அலுவுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மதியம் 1 மணிக்கும் மாலை 4:30 மணிக்கும் இடையே ஏதோ தீவிரமான சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் போஸ்ட்
ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள போஸ்டில், நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு ஜகதீப் தன்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சில விவாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மாலை 4:30 மணிக்கு சந்திக்க குழு முடிவு செய்தது.
மாலை 4:30 மணிக்கு ஜகதீப் தன்கர் தலைமையில் அலுவல் ஆலோசனைக் குழு மீண்டும் கூடியது. நட்டா மற்றும்ஸ் ரிஜிஜு ஆகியோரின் வருகைக்காக குழு காத்திருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. இரண்டு மூத்த அமைச்சர்கள் வருகை தரவில்லை என்ற தகவல் ஜகதீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், குழுவின் கூட்டத்தை இன்று பிற்பகல் 1 மணிக்கு மறு திட்டமிடல் செய்தார்.
நட்டா மற்றும் ரிஜிஜு வேண்டுமென்றே நேற்றைய இரண்டாவது அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு ஏதோ ஒரு முக்கியமான காரணம் மதியம் 1 மணிக்கும் மாலை 4:30 மணிக்கும் இடையில் நடந்திருக்க வேண்டும். இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் உடல் நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாகக் கூறியுள்ளார். அதை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அவருடைய ராஜினாமாவுக்கு வேறு பல ஆழமான காரணங்களும் உள்ளன என்பது உண்மை.
தற்போதைய பாஜக ஆட்சியின் கீழ் முடிந்தவரை எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடுக்க முயன்றார். விதிமுறைகள், மரபுகள் மற்றும் நெறிமுறைகளை அவர் உறுதியாக கடைபிடித்தார், அவை அவருடைய பதவியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் நம்பினார். ஜகதீப் தன்கரின் ராஜினாமா அவரது உயரிய குணத்தை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், இது பல சந்தேங்கங்களை எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications