மூழ்கிய தலைநகர்.. சுற்றிலும் தண்ணீர்.. போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! டெல்லியில் மாஸ்டர் பிளான்
டெல்லி: டெல்லியை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், நிலைமை விரைவில் சீரடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க டெல்லி அரசு மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது.
ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஹரியானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹத்னி குந்த் தடுப்பணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து தண்ணீர் யமுனை நதியில் திறந்துவிடப்பட்டது. இது டெல்லிக்கு புதிய தலைவலியை உருவாக்கியது.

யமுனையில் நீர் மட்டம் உயர உயர அதன் கரையில் அமைந்துள்ள டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க தொடங்கியது. கடந்த ஒரு சில நாட்களில் டெல்லியின் முக்கிய இடங்களில் நீர் சூழ தொடங்கிவிட்டது. இப்படியாக சூழ்ந்த நீர் வெளியேறாமல் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இது குறித்து மக்கள் கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளில் இப்படிப்பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை என்று குறிப்பிடுகின்றனர். கடைசியாக கடந்த 1978ம் ஆண்டு டெல்லி யமுனையின் நீர் மட்டம் 207.49 மீட்டராக இருந்தது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக இந்த நீர் மட்டம் 208.66 மீட்டராக உயர்ந்தது. இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ஐடிஓ, ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஹனுமான் மந்திர், யமுனா பஜார், கீதா காலனி, சிவில் லைன்களுக்கு வெளியே உள்ள ரோடுகளிலும் நீர் தேங்கியுள்ளது. அவ்வளவு ஏன் உச்சநீதிமன்ற வளாகத்தில் கூட நீர் தேங்கிவிட்டது. நாலா புறமும் நீ்ர் சூழ்ந்ததால் அதை வெளியேற்ற முடியாமல் சுகாதார ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
முன்னதாக வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தில் நீந்த முயன்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி வெள்ளம் காரணமாக பதிவு செய்யப்பட்ட முதல் பலி இதுதான். தற்போது யமுனை அணையின் 5 கதவுகளையும் திறக்கும் பணி நடைபெற்று வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன் காரணமாக நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களை விட தற்போது டெல்லயில் ஓரளவு நீர் வடிய தொடங்கியுள்ளது.
யமுனையிலும் நீர் மட்டும் 107 அடியாக குறைந்திருக்கிறது. போக்குவரத்துகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்தை சீர் செய்ய சுமார் 4,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 4,500 ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications