கணவனை மனைவி பிரிந்தாலும் இனி "ஜீவனாம்சம்" வழங்க வேண்டும்.. டெல்லி உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு!
டெல்லி: கணவனின் செயலால் அவரை பிரிந்து வாழ்ந்து வரும் மனைவிக்கு 'ஜீவனாம்சம்' வழங்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு கணவனின் வருவாயை நம்பியே வாழ்கின்றனர். இவ்வாறு இருக்கையில் கணவன் குடும்பத்தை விட்டு சென்றுவிடும்போது அப்பெண் நிலைகுலைந்து போய்விடுகிறார்.
இப்பெண்கள் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தை நாடுகையில், வெற்றிகரமாக ஜீவனாம்சம் பெருவது என்பது இவர்களுக்கு கனவாகத்தான் இருக்கிறது.
விவாகரத்து.. கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்.. ஏன் தெரியுமா?
இந்திய சமூகம்
இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் திருமணம் என்பது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்தின் பெயரிலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. இவ்வாறு இருக்கையில் அப்பெண்ணுக்கு திருமணத்தில் இருக்கும் விருப்பம் குறித்தும், எதிர்பார்ப்புகள் குறித்தும் குடும்பமும் பெற்றோர்களும் பெரியதாக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இவ்வாறு செய்யப்படும் திருமணங்களில் குடும்ப வன்முறை தவிர்க்க இயலாததாக இருப்பதாக மகளிர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அவதூறுகள்
குடும்பத்தில் ஏற்படும் சில சிக்கல்கள் காரணமாக மனைவியை கணவர்கள் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இவ்வாறு ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் இவ்வாறு ஜீவனாம்சம் பெறுவதற்காக பெண்கள் நீண்ட நெடும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் பெண்கள் மீது வீசப்படும் குற்றச்சாட்டுகள் கேட்கவே சகிக்காதவையாக இருக்கும். தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார், மனநிலை சரியில்லாதவர், குடும்ப பாரம்பரியத்தை காக்க தெரியாதவர் என கணவர்கள் கூறும் காரணங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
வழக்கு
அந்த வகையில் தற்போது ஜீவனாம்சம் கோரிய வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்து அனைவராலும் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. அதாவது கணவனை விட்டு மனைவி சென்று விட்டாலும் அவர் ஜீவனாம்சம் பெறுவதற்கு தகுதியானவர்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதற்கு முன்னர் வரை மனைவியை விட்டு கணவர் சென்றால்தான் ஜீவனாம்சம் என்று இருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜீவனாம்சம் வழங்கலாம்
அதாவது கணவனின் கொடுமை தாளாமல் மனைவி பிரிந்து சென்றிருக்கும் வழக்குகளில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கப்படலாம். கணவனின் தவறான நடத்தை மூலமாக தனக்கோ, தனது குழந்தைகளுக்கோ பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கும் நிலையில் மனைவி கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர் ஜீவனாம்சம் பெற தகுதியானவர்தான் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்றம் மனைவிக்கு ஜீவனாம்சத்தை மறுத்துள்ளது.
நடைமுறை யதார்த்தம்
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் கையாள வேண்டும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக ஜீவனாம்சம் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை 'குடும்ப வன்முறை சட்டத்தின்' கீழ் 60 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். ஆனால், தற்போது பத்தாண்டுகளுக்கும் மேலாக கூட இந்த வழக்குகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.