வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: வெறுப்பு என்னும் நெருப்பு மனிதர்களை குருடாக்குவதாகவும், அரசியல் வெறுப்பை கற்றுத் தந்தால் மக்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாகி விடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்த முதியவர் யார் என்று போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

உன் பெயர் முகமதா?
அதில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் பார்த்து, "உனது பெயர் முகமதா?" என்று பாஜகவை சேர்ந்த ஒருவர் ஆவேசமாக கேட்டதும், பதில் சொல்லத் திணறும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் பலமுறை தாக்குவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. தொடர்ந்து பாஜக பிரமுகரால் தாக்கப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் நினைவிழந்து விழுந்து உயிரிழந்தார்.

பாஜக பிரமுகர்
இந்தச் சம்பவம் தொடர்பாக நீமுச் மாவட்டத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கும் நபர் தினேஷ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் முனிசிபள் காப்ரேஷன் உறுப்பினரின் கணவர் தான் தினேஷ் குஷ்வாஹா என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன பன்வர்லால் ஜெயின்
இது குறித்து போலீசார் கூறுகையில், "ரத்லம் மாவட்டத்தில் உள்ள சர்சியைச் சேர்ந்த முதியவர் பன்வர்லால் ஜெயின். கடந்த மே 15ஆம் தேதி மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்ற அவர், அதன் பின்னர் காணாமல் போனார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்படி அவரது புகைப்படங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பித் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில் தான், நேற்று நீமுச் மாவட்டத்தில் சாலையோரம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது" என்றனர்.

அறைந்தே கொலை
உயிரிழந்த பன்வர்லால் ஜெயின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பன்வர்லால் ஜெயினுக்கு இறுதிச் சடங்கு செய்தனர். அதன் பின்னரே குடும்பத்தினருக்கு இந்த வீடியோ குறித்துத் தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பெஞ்சில் அமர்ந்து இருந்த ஜெயினிடம், "உன் பெயர் என்ன? முகமதா?" என்று பாஜக பிரமுகர் தினேஷ் குஷ்வாஹா ஆவேசமாகக் கேட்கிறார். பின்னர் திடீரென அவரை அறையத் தொடங்குகிறார்.

ராகுல் காந்தி கண்டனம்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், "வெறுப்பு என்னும் நெருப்பு மனிதர்களை குருடாக்குவதாகவும், அரசியல் வெறுப்பை கற்றுத் தந்தால் மக்களில் ஒருவரை ஒருவர் எதிரிகளாகி விடுகின்றனர். நினைவிருக்கட்டும். மதம் ஒருவரை ஒருவர் வெறுப்பு பாராட்ட கற்றுத்தரவில்லை."












Click it and Unblock the Notifications