மருமகள் எதிர்த்து போட்டியிட்டதால்.. அப்படியே ரிவர்ஸ்போன மாமனார்.. கோவா தேர்தல் கலகலப்பு!
டெல்லி: மருமகளே தனக்கு எதிராக களமிறங்கியதால் தேர்தலில் இருந்து கோவா முன்னாள் முதல்வர் விலகியுள்ளார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை...சென்னைவாசிகளும் அனுபவிக்க தயாராகுங்கள்
இந்த 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் சிறிய மாநிலமான கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கோவா சட்டசபை தேர்தல்
இங்கு ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த முறை ஆட்சி கைக்கு வந்தும் விட்டதுபோல் இந்த முறை இருக்க கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகியவை போட்டி அளிக்க தயாராக உள்ளன.
மாமனாரை எதிர்த்து களமிறங்கிய மருமகள்
இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதாப்சிங் ரானே போரியம் தொகுதியில் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் அறிவித்தது. பிரதாப்சிங் ரானேவின் மருமகள் தேவியா விஸ்வஜீத் ரானே பாஜகவில் உள்ளார். இந்த நிலையில் தேவியா விஸ்வஜீத் ரானே போரியம் தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது.
அப்படியே பின்வாங்கிய முன்னாள் முதல்வர்
தான் போட்டியிடும் தொகுதியில் தன்னை எதிர்த்து இப்படி ஒருவர் களமிறங்குவார் என்று பிரதாப்சிங் ரானே எதிர்பார்க்கவில்லை. மருமகளே தனக்கு எதிராக களமிறங்கியதால் வேறு வழியின்றி தேர்தலில் இருந்து விலகுவதாக பிரதாப்சிங் ரானே தெரிவித்துள்ளார். மருமகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் 87 வயதான பிரதாப்சிங் ரானே போட்டியில் இருந்து பின்வாங்கியதாக தகவல் பரவின.
அவர் கூறிய காரணத்தை பாருங்க
ஆனால் இதனை மறுத்துள்ள பிரதாப்சிங் ரானே தனது வயதின் காரணமாகத்தான் தேர்தலில் இருந்து விலகுவதாகவும் குடும்பத்தின் அழுத்தத்தால் அல்ல என்றும் கூறியுள்ளார். போரியம் தொகுதி முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானேவின் கோட்டை ஆகும். இங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்று 11 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்தத் தொகுதியில் அவர் இதுவரை தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால் தற்போது அவரது மருமகளே இந்த கோட்டையை தகர்த்துள்ளார். பிரதாப்சிங் ரானேவின் மகன் விஸ்வஜீத் ரானே கோவா பாஜக அரசில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.