மோசமான உணவு, ஒர்க் ஆகாத சீட்.. ஏர் இந்தியா விமான பயணி பகிர்ந்த'திகில் கதை'.. கடைசியில் தான் உச்சம்
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு பயணித்தவர் தான் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மோசமான சாப்பாடு, உட்காரவே முடியாத இருக்கை, லக்கேஜ் உடைப்பு, தாமதமான பயணம் என மொத்த அனுபவமும் ஒரு திகில் கதை என்று விமர்சித்துள்ளார்.
வினீத் என்பவர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகருக்கு பிசினஸ் கிளாஸ் வகுப்பில் முன்பதிவு செய்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். 5 லட்சம் செலவு செய்து பயணித்த அனுபவங்களை மோசமான அனுபவம் என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், " இது ஒரு திகில் கதை ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து புது டெல்லி - நெவார்க் (AI 105) விமானத்தில் பயணித்தேன். எமிரேட்ஸ் விமானங்களில் தான் நான் அடிக்கடி பயணித்து வந்தேன். நான் அடிக்கடி செல்லும் இடங்களான நியூயார்க், சிகாகோ மற்றும் லண்டனுக்கு நேரடி விமானங்களை வழங்குவதால், சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தேன்.

அந்த விமான பயண அனுபவம் நான் எதிர்பார்த்ததை போல் இல்லை. முன்பதிவு செய்யப்பட்ட பிசினிஸ் கிளாஸ் சீட்டில் இருக்கைகள் சுத்தமாக இல்லை. தேய்ந்து போய் கிடந்தது. மொத்தம் இருந்த 35 சீட்டில் 5 சீட்டுகள் சுத்தமாக செயல்படவில்லை. விமானம் கிளம்பவே 25 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனாது. ஒரு வழியாக விமானம் கிளம்பிய பின்னர், சரியாக 30 நிமிடத்திற்கு பின் எனது சீட்டை சாய்த்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்தேன்.. அப்போது அதிகாலை 3.30மணி இருக்கும். ஆனால் என் சீட் சாயவே இல்லை. அப்போது தான் எனது இருக்கை சுத்தமாக வேலையே செய்யவில்லை என்பது எனக்கு தெரிந்தது.

இதையடுத்து நான் விமான பணிப்பெண்களிடம் கேட்டு, 10 நிமிட முயற்சிக்குப் பிறகு, அவர்கள் என்னை வேலை செய்யும் மற்றொரு இருக்கைக்கு மாற்றினார்கள். சரி அமர்ந்து செல்வோம் என்று தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு தூங்கி எழுந்தேன். எனக்கு உணவு பரிமாறினார்கள். அது சமைக்கப்படாமல் இருந்தது ( ஏர் இந்தியாவில் இப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்கொண்டதில்லை), பழங்கள் அழுகிப்போய் கிடந்தன. (விமானத்தில் இருந்த அனைவரும் திரும்ப கொடுத்துவிட்டனர்)
அடுத்ததாக வந்தது ஒரு பிரச்சனை- சரி டிவியாவது பார்க்கலாமே என்று பார்த்தால், டிவி/ஸ்கிரீனும் வேலை செய்யவில்லை. நான் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஸ்கிரீனில் திரும்ப திரும்ப முயற்சித்தும் எரர் என்றே எனக்கு காட்டியது. இத்தனைக்கும் பிறகு இறுதியாக அவர்கள் செய்தது தான் என் பயணத்திற்கே சவப்பெட்டியில் ஆணி (சாவு மணி) அடித்தது போல் இருந்தது.. ஆமாங்க.. நான் கொண்டு போன லக்கேஜையும் அவர்கள் உடைத்தார்கள்.

மோசமான உணவு, தேய்ந்து போன சீட், அழுக்கு சீட் கவர்கள், ரூ.500000 கட்டி பயணித்த எனக்கு வேலை செய்யாத டிவி,லக்கேஜ்களும் உடைப்பு என எல்லாமே இருந்தது. நான் இதை விட மலிவான விமான டிக்கெட்டை எதிகேட் ஏர்லைன்ஸிஸை பார்த்தேன். ஆனால் ஏர் இந்தியாவில் நேரடி விமான சேவை என்று இருந்ததால் இப்படி தேர்வு செய்தேன்" என்று வேதனையுடன் தனது கருத்தை வினீத் கூறினார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஏர் இந்தியா வினீத்துக்கு பதில் அளித்துள்ளது. அதையும் அவர் பகிர்ந்துள்ளார். "டியர் சார், உங்கள் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம், எங்கள் பயணிகள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்வதை நாங்கள் ஒருபோதும் விரும்புவது இல்லை. தயவுசெய்து உங்களின் முன்பதிவு விவரங்கள், இருக்கை எண் மற்றும் DBR/ ஃபைலர் குறிப்பு எண் ஆகியவற்றை எங்களுக்கு சொல்லுங்கள். மேல் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளது.
இதனிடையே ஏர் இந்தியாவில் பயணித்த போது எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் அனுபவத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு ட்விட்டர்வாசி கூறுகையில், " இதன் காரணமாகவே நான் எப்போதும் சர்வதேச விமானங்களுக்கு ஏர் இந்தியாவை இதற்காகவே தவிர்ப்பதை கொள்கையாக வைத்துள்ளேன். உள்நாட்டில் விமான பயணம் என்றாலும் கடைசி ஆப்சனாகவே வைத்துள்ளேன். என் பயணத்தை கெடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர்வாசி கூறுகையில், "டெல்லியிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இதேபோன்ற கசப்பான அனுபவத்தை நானும் சந்தித்தேன். நாங்கள் பயணித்த இருக்கைகள் வேலை செய்யவில்லை, டிவி ஸ்கிரீன் ஒர்க் ஆகவில்லை, விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவே சென்றது, ஏசி செயல்படாததால் ஒரு மணி நேரம் கொடுமையாக இருந்தது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications