Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திராவை எதிர்த்து குற்றப்பத்திரிகை வாசித்த மாணவன்! யார் இந்த யெச்சூரி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திராகாந்தியை எதிர்த்து நடைபெற்ற ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் மிகத் துணிச்சலாக சீதாராம் யெச்சூரி குற்றப்பத்திரிகை வாசித்த புகைப்படம் ஒன்று இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

இந்தியா பல பழுத்த அரசியல் தலைவர்களை படிப்படியாக இழந்து வருகிறது. அப்படி ஒரு அப்பழுக்கற்ற தலைவர் சீதாராம் யெச்சூரியை கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களை மட்டும் இழக்கவில்லை. மிகச் சிறந்த சண்டைக்காரனை இந்திய அரசியல் களம் இழந்திருக்கிறது. ஆங்கிலத்தில் The tallest leader என்ற பதம் ஒன்று உள்ளது. சீதாராம் யெச்சூரியை The tallest Left leader எனத் தயங்காமல் சொல்லலாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இருந்த மிக மூத்த தலைவர் அவர். அதைவிட முக்கியமான விசயம் அவசரநிலையை இந்தியா காந்தி பிரகடனப்படுத்திய போது, அதைக் கண்டு அஞ்சாமல் அவரை எதிர்த்துக் குற்றப்பத்திரிகை வாசித்தவர் இந்த சீதாராம் யெச்சூரி. இந்தத் தகவல் இளம் தலைமுறைக்குத் தெரியாதது.

sitaram yechury indira gandhi

கடந்த 12 ஆம் தேதி அவர் மறைந்தபோது அவரது வயது 72. யெச்சூரி தன் அரசியல் வாழ்க்கையை இளம் வயதிலேயே தொடங்கியவர். இந்திய அரசியல் களத்தை நிர்ணயித்த தலைவர்களில் ஒருவர். ஆகவேதான், அவரை கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் 'நம் காலத்து நாயகன்' என்று அன்புடன் அடையாளப்படுத்தி பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆங்கில ஏடுகள் இவரை மறைவையொட்டி மிகச்சிறந்த மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவர் யெச்சூரி என எழுதியுள்ளன.

பல ஆண்டுகளாக டெல்லி அரசியலின் முகமாக வலம் வந்த யெச்சூரி பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடாவில். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி இவர் பிறந்தபோது மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியுடன் ஆந்திரா இணைந்து இருந்தது. யெச்சூரியின் அப்பா ஒரு பொறியாளர். அம்மா அரசு ஊழியர்.

யெச்சூரியின் அரசியல் வாழ்க்கை இந்தியாவின் இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்படும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இங்கே படிப்பதற்காகச் சென்ற யெச்சூரி, பிடிக்கப் பிடிக்கத் துள்ளும் பல இடதுசாரி கொள்கைகளைக் கற்றார். 1969இல் தெலுங்கானா போராட்டம் சூடுபிடித்து எரிந்தது. அந்தப் பகுதியின் மண்ணின் மைந்தனான யெச்சூரிக்கு இதை உத்வேகத்தைக் கொடுத்தது. உடனே மாணவர்களுடன் இணைத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போதுதான் இந்திய ஜனநாயகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் அரங்கேறியது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி எமர்ஜென்சியை நாடு முழுவதும் அமல்படுத்தினார். இந்த அவசரநிலை 1977 வரை நீடித்தது. நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அச்ச ரேகை மக்களின் மனதில் பதிய தொடங்கியது. இந்திராவின் இந்தச் செயல் இளைஞராக இருந்த யெச்சூரியை கோபமடையச் செய்தது. தான் மேற்கொண்டிருந்த பிஹெச்டி படிப்பைப் பாதியிலேயே கைகழுவிவிட்டு அவசரநிலைக்கு எதிராகக் குரல் கொடுக்க தொடங்கினார். அதனால் கைதும் செய்யப்பட்டார்.

இந்திராவின் அவசரநிலையைக் கண்டு பழுத்த அரசியல்வாதிகளே வாய்மூடி நின்றபோது யெச்சூரியின் வேகம் பலரை அவர் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. இந்திய மாணவர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் எஸ்.எஃப்.ஐயில் உறுப்பினரானார். ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.

இவர் மாணவர்களைத் திரட்டி நடத்திய பெரிய போராட்டத்தால் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இந்திராகாந்தி வகித்து வந்த Chancellor பதவிக்கு நெருக்கடி வலுத்தது. இதனால் இந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். 1978இல் யெச்சூரி ஜேஎன்யு மாணவர்கள் மத்தியில் ஒரு நாயகனாக வலம் வந்தார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைச் சந்திக்க வந்த இந்திரா காந்தியை அருகில் வைத்துக் கொண்டு யெச்சூரி அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை வாசித்தார்.

அந்தத் துணிச்சல், அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்திராகாந்தியைவிட இந்த இளைஞனிடம் மேலோங்கி நின்றது. அன்று தொடங்கி இவரது போராட்டக் குணம் இந்திய அரசியலில் 50 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. தொடக்கக் காலத்தில் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிப் போராடத் தொடங்கிய இவர் இறுதிவரை வகுப்புவாத அரசியலுக்கு எதிராக நின்று களமாடினார். 2015 தொடங்கி 2022 வரை அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.

தனது கட்சி சார்ந்த தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என புகழப்பட்ட யெச்சூரிக்கு பல கட்சிகளில் நண்பர்கள் உள்ளனர். பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஒரு அரணாக நின்றவர் என இவரைப் பற்றி சகக் கட்சித் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் கட்சிக்கு தனக்கு முந்தையவரான பிரகாஷ் காரந்தை விடக் கொள்கை கடைப்பிடிப்பதில் கண்டிப்பு காட்டியவர் என்கிறனர் இவரது கட்சியினர். இதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். யுபிஏ அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மிகக் கடுமையாக பிரகாஷ் காரந்தை விட விமர்சித்தவர் யெச்சூரி.

மிகக் கடுமையாகக் காங்கிரஸ் கொள்கைகளை இவர் எதிர்த்தாலும் ராகுல்காந்தியுடன் ஒரு இணக்கமான நட்பை கடைப்பிடித்து வந்தார். சுருக்கமாகச் சொன்னால், கட்டுப்பட்டுக் கிடந்த சிபிஐஎம் கொள்கை முடிவுகளில் ஒரு நவீன பார்வையை உருவாக்கினார் இவர். கட்சியின் விவாத எல்லையை விரிவுபடுத்தினார். அதற்கான மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

மூலதனக் கொள்கையில் மரபுவழி இடதுசாரிகள் ஒரு கடினத் தன்மையைக் கடைப்பிடித்து வந்தனர். அதைச் சீராக்கியவர் யெச்சூரி. இவரது மறைவு சிபிஐஎம் கட்சியின் ஒரு சகாப்தத்தின் முடிவையே காட்டுகிறது. மேலும் புதிய சவால்களை நோக்கி கட்சியை இழுத்துச் சென்றுள்ளது. தனி நபர்களைக் கட்சியும் கொள்கையும் நம்பி இருப்பதில்லை. தத்துவமே வழி நடத்துகிறது என்று இடதுசாரிகள் ஒரு வலுவான வாதத்தை முன்வைத்தாலும், அதற்கு விசை எங்கிருந்து தரப்படுகிறது என்பது முக்கியமானது. அதன் அளவில் யெச்சூரி ஒரு உந்துவிசையாகக் கட்சியில் கடைசி வரை இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+