3 டோஸ் வேணாம், இனி சிங்கில் டோஸ் போதும்.. ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி
டெல்லி : ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொடங்கிய காலத்தில் முதன் முதலாக தடுப்பூசியை கண்டறிந்ததாக ரஷ்யா அறிவித்தது. ஸ்புட்னிக் V என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை அரசு அதிபர் புட்டின், அவரது மகள் உள்ளிட்டோர் செலுத்தி கொண்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் ஸ்புட்னிக் v தடுப்பூசியைப் போலவே அமைப்பைக் கொண்ட ஸ்புட்னிக் லைட் என்ற புதிய தடுப்பூசியும் சிங்கில் டோஸாக ரஷ்யா அறிமுகப்படுத்தியது.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது. போதிய தரவுகள் சமர்பிக்கப்படாத நிலையில், அந்தத் தடுப்பூசியின் மூன்றாம்கட்டப் பரிசோதனைக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் தொடர்பான தரவுகளை சமர்பித்ததை அடுத்து, மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு ஓப்புதல் வழங்கப்பட்டது.

பின் விளைவுகள் இல்லை
ரஷ்ய தடுப்பூசியான, ஸ்புட்னிக்லைட் 79.4 சதவீதம் செயல்திறன்கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தடுப்பூசிகடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் லைட் செலுத்த அனுமதியளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் அனுமதி
இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்புட்னிக் லைட் கோவிட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியுள்ளார் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

9வது தடுப்பூசி
பல்வேறு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு ஸ்புட்னிக் லைட்டுக்கு தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான இந்தியாவின் மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இது வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் கோவிட்-19 தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை DCGI வழங்கியுள்ளது. இது நாட்டில் 9வது #COVID19 தடுப்பூசி ஆகும். இது தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications