ஜம்மு காஷ்மீரை பழையபடி மாநிலமாக மாற்றி.. தேர்தல் நடத்தவேண்டும்.. உச்சநீதிமன்றம் காலக்கெடு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவையையும் நிர்ணயித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாள்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது என்று, மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
அதேபோல, யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீரை முடிந்தவரை விரைவாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு முழு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications