ஞானவாபி மசூதியில் லிங்கம்? அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளன ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற வடிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தெரிந்துகொள்ள கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாரணாசியில் சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மசூதி குறித்து சில சர்ச்சைகள் நிலவி வந்தன. அதாவது, இது பழைய காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த மசூதியில் நடத்திய ஆய்வில் லிங்கம் போன்ற வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்த மசூதி இந்து கோயிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டது என இந்துத்துவ அமைப்பினர் பிரசாரம் நடத்த தொடங்கினர்.

ஆனால், மசூதிக்கு உள்ளே வருவதற்கு முன்னர் கை, கால்களை கழுவ ஒரு நீரூற்று இருந்தது என்றும், அதைத்தான் இவர்கள் லிங்கம் போன்ற வடிவம் என்று கூறிகிறார்கள் என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இந்துத்துவ அமைப்பினர் இதனை ஏற்கவில்லை. எனவே மாவட்ட நீதிமன்றத்தை அணுகி இந்த லிங்கம் வடிவத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னர் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த லிங்க வடிவத்தின் உண்மையான வயதை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதுவரை இந்த வடிவம் சேதமடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் தடையவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா மற்றும் புதியதாக நீதிபதியாக பதியேற்ற கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications