‛‛எடுபடாத ED வாதங்கள்’’.. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்க காரணம் இந்த 2 பாயிண்ட் தான்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல மார்ச் 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
இதனையடுத்து கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்து. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை.
எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீனோ, வேறு எந்த நிவாரணத்தையோ கோரவில்லை. மாறாக, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
மே 3ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, "கெஜ்ரிவால் மீதான விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம்" என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கறாராக வாதிட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக ஜாமீன் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எங்களிடம் கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்து பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.
ஆனால் நீதிபதிகள் அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கவில்லை. "கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்திருக்கிறீர்கள். மட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
ஆனால் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. எனவே இந்த காரணங்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர். ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மே 18ம் தேதியிலிருந்து உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்கு செல்ல இருப்பதையும் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு காரணமாகும்.












Click it and Unblock the Notifications