ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என முன்பே தெரியும்.. 'ஏனெனில்' மல்லிகார்ஜூன கார்கே பரபர
டெல்லி: ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஏனெனில் அவர்கள் நீதிபதிகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது.என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

4 ஆண்டுகளாக விசாரணை
சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த வழக்கிற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

எங்களுக்கு முன்பே தெரியும்..
மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது. இதனிடையே, இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 'ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என எங்களுக்கு முன்பே தெரியும்' என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: -

சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்
ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஏனெனில் அவர்கள் நீதிபதிகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்" என்றார். அவதூறு வழக்கு தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: - "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதை அடைவதற்கான வழி" என்று பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications