சாதிவாரி கணக்கெடுப்பு நடக்காததால்.. பாதிப்புகளை அமித்ஷாவிடம் பட்டியலிட்ட திருமாவளவன்!
டெல்லி: 18வது லோக்சபா கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின்னரும் இந்த கோரிக்கை பரவலாக எதிரொலித்து வருகிறது.

கடந்த 1990ம் ஆண்டு இறுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், மண்டல் கமிஷன் அறிக்கையை விமர்சித்து ராஜீவ் காந்தி பேசிய விஷயங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில்தான் தற்போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இதே கோரிக்கையை ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தி எதிரொலிக்க தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் மட்டுமல்லாது இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்தி வருகின்றன. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப பட்டியல், பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார். அமித்ஷாவிடம் அவர் பகிர்ந்த கோரிக்கைகளையும் x தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
“இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011 க்கு பிறகு நடைபெறவில்லை. கொரோனா காலகட்டம் என்பதால் 2021 இல் காலவரையின்றி உங்கள் அரசால் ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாததால் பல்வேறு மற்ற கணக்கெடுப்புகளும் நடைபெறாமல் இருக்கிறது. குறிப்பாக, பொருள் மற்றும் சேவைக்கான நுகர்வு கணக்கெடுப்பு, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல முக்கியமான கணக்கெடுப்புகள் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் உணவு பாதுகாப்பு சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் 2011 கணக்கெடுப்பின்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநில அரசுகளால் எஸ்சி / எஸ்டி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அமித்ஷாவிடம் அளித்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், “மொத்தமுள்ள 233 நாடுகளில் 81 சதவிகிதமான நாடுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், தலிபான்களால் ஆளப்படும் ஆப்கானிஸ்தான், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளில்தான் இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது” என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications