நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்! பாய்ந்து வந்த பாஜக.. கடும் எதிர்ப்பு
டெல்லி: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பெரியதாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தை மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு எழுப்பியிருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு பேச வேண்டாம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப திமுக திட்டமிட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதல் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை திமுக எம்பிக்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் டி.ஆர்.பாலு இந்த விவகாரம் குறித்து பேசினார்.

தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்க மதவாத சக்திகள் செயல்படுகின்றன என்றும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்தும் கடுமையான விமர்சனங்களை பாலு அடுக்கியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து இங்கு பேச வேண்டாம் என்றும், நீதிபதி குறித்து டி.ஆர்.பாலுவின் விமர்சனம் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும், அந்த கருத்துக்கள் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பாலுவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், "நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜக போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார். இதனையடுத்து பாலுவின் விமர்சனம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மறுபுறம் மாநிலங்களவையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கொடுக்கப்பட்ட நோட்டீஸ்கள் ஏற்கப்படவில்லை. இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications