போன்பே - கூகுள்பேயில் ரூ.2000க்கு மேல் பணபரிமாற்றத்துக்கு ஜிஎஸ்டியா? மத்திய அரசு தந்த குட்நியூஸ்
டெல்லி: போன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியான நிலையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் தற்போது அதுபற்றி மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
இப்போது நாம் அனைவரும் பணப்பரிமாற்றத்துக்கு யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்பட பல யுபிஐ செயலிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்போது இந்த செயலிகள் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்தவர்களுக்கு நம்மால் உடனடியாக பணம் அனுப்பி வைக்க முடியும்.

அதேபோல் கடை, ஹோட்டல் உள்பட எங்கு சென்றாலும் கூட யுபிஐ செயலிகள் மூலம் நம்மால் பணம் செலுத்த முடியும். இப்படி நாம் அனுப்பும் பணம் மற்றும் செலுத்தும் பணத்துக்கு வரி என்பது கிடையாது. இந்நிலையில் தான் நேற்று பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது.
அதாவது அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும். இது யுபிஐ செயலிகள் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி அதற்கு பணம் செலுத்தும் போதும், கடைகளில் ஷாப்பிங் செய்து அதற்கு பணம் அனுப்பும்போதும் மட்டுமே பொருந்தும். இதன்மீது அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்ய உள்ளார் என்ற தகவல் பரவியது.
இதனை பார்த்த பலரும் கொதித்து போயினர். மத்திய அரசை விமர்சிக்க தொடங்கினர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தான் மத்திய அரசு முக்கிய விளக்கத்தை தந்துள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் பத்திரிக்கை தகவல் (Press Information Bureau or PIB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யுபிஐயில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இது தவறான தகவல். அடிப்படை ஆதாரமற்றது. யுபிஐ வழியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. யுபிஐ சேவைகளின் வளர்ச்சியடைய செய்யவும், அதனை ஆதரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2021-22ம் நிதியாண்டில் இருந்து ஊக்கப்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22ல் ரூ.1,389 கோடி, 2022-23ல் ரூ2,210 கோடி, 2023-24ல் ரூ.3,631 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் வலுவான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு சிறப்பு பங்களிப்பை செய்யும். நம் நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்தது 2025 மார்ச்க்குள் ரூ.260.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது டிஜிட்டல் கட்டண சேவையை வணிகர்கள் ஏற்றுக்கொள்வதையும், மக்கள் அதன் மீதான நம்பிக்கையை பெற்றுள்ளதையும் தான் பிரதிபலிக்கிறது. இதனால் யுபிஐ சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications