18 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து.. கதறிய உஸ்பெகிஸ்தான்.. இந்தியாவில் 3 பேர் கைது
'டோக் 1 மேக்ஸ்' என்ற அந்த மருந்தை பகுப்பாய்வு செய்த உஸ்பெகிஸ்தான் விஞ்ஞானிகள், அதில் எத்திலின் கிளைக்கோல் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர்.
டெல்லி: உஸ்பெகிஸ்தானில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் முதல் கைது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நொய்டாவில் இயங்கும் அந்த மருந்து நிறுவனத்தில் ஊழியர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் இயக்குநர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் சம்பவம்
உஸ்பெகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சம்பவம் உலகையே உலுக்கியது. அங்கு காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்துள்ளனர். ஆனால், அந்த மருந்தை குடித்த சில மணிநேரங்களிலேயே அந்தக் குழந்தைகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி
இதனிடையே, 'டோக் 1 மேக்ஸ்' என்ற அந்த மருந்தை பகுப்பாய்வு செய்த உஸ்பெகிஸ்தான் விஞ்ஞானிகள், அதில் எத்திலின் கிளைக்கோல் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், குழந்தைகளுக்கான மருந்துகளில் அனுமதிக்கக்கூடிய அளவை விட அதிகமாக இந்த வேதிப்பொருள் இருந்ததே 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, நொய்டாவில் செயல்படும் அந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனமான 'மேரியன் பயோடெக்' நிறுவனத்தில் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அந்தக் குறிப்பிட்ட மருந்தில் மட்டுமல்லாமல் வேறு சில மருந்துகளிலும் அளவுக்கதிகமான வேதிப்பொருள்கள் கலந்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, 5-க்கு மேற்பட்ட மருந்துகளுககு தடைவிதிக்கப்பட்டது.

3 பேர் கைது
இந்த சூழலில், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புகாரின் பேரில், நொய்டா போலீஸார் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் இரண்டு இயக்குநர் உட்பட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த துகின் பட்டாச்சார்யா, அதுல் ராவத், மூல் சிங் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெயா ஜெயின் மற்றும் சச்சின் ஜெயின் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தனிப்படை அமைத்து நொய்டா போலீஸார் தேடி வருகின்றனர்.

முதன்முறை அல்ல..
இந்திய தயாரிப்பு மருந்துகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். அப்போது ஹரியானாவில் செயல்படும் சோனிபட் மெய்டன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் இந்திய மருந்துகளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications