யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. திமுக முடிவை மாற்றிக் கொள்ளாது - திருச்சி சிவா பேட்டி!
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் இன்றுச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை ஒருமனதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது. ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை தேர்வு செய்ய கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று ஆலோசித்து வந்தன.

யஷ்வந்த் சின்ஹா
சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மூவருமே அந்த வேண்டுகோளை நிராகரித்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிவா
இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "அரசியலில் அனுபவம் நிறைந்தவர் யஷ்வந்த் சின்ஹா என்பதால் அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த ஒருமனதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

திமுக முடிவு
தற்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா சிறந்த வேட்பாளர் ஆவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications