ராஜ்யசபாவில் வேளாண் மசோதா நகல் கிழிப்பு- சபை தலைவர் மைக் உடைப்பு- கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றம்
டெல்லி: ராஜ்யசபாவில் வேளாண் மசோதாவுக்கு எதிராக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது. வேளாண் மசோதாவின் நகல்கள் கிழித்து எறியப்பட்டதுடன் சபை தலைவர் இருக்கையில் மைக் உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்
இதனையடுத்து ராஜ்யசபாவில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் இதை ஆதரித்த அதிமுக, ராஜ்யசபாவில் கடுமையாக எதிர்த்தது. இதேபோல் திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் இம்மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

கடும் அமளி
எம்.பிக்களின் விமர்சனங்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதிலளித்து இருக்கையில் அமர்ந்தார். அப்போது மசோதாக்களை குரல் வாக்கெடுப்புக்கு விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மசோதா நகல்கள் கிழிப்பு
ஒருகட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரெயன், சபை தலைவர் இருக்கை முன் சென்று வேளாண் மசோதாக்களின் நகல்களை கிழித்து எறிந்தார். அப்போது சபைத் தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இதனால் ராஜ்யசபா போர்க்களமாக காட்சியளித்தது.

ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
எதிர்க்கட்சி எம்.பிக்களின் முழக்கங்களால் ராஜ்யசபா நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் கடும் அமளிக்கு இடையே ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications