மே.வங்கம்: வடமாவட்டங்களை பிரித்து தனி மாநிலமா? மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தாரால் கொந்தளிப்பு!
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அம்மாநிலத்தின் வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் வலியுறுத்தி இருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேற்கு வங்கத்தை இரண்டாக துண்டாடுவது பிரிவினைவாத செயல் என்று அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மலை பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரி நீண்டகால போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டார்ஜிலிங் உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கி தனி கூர்க்காலாந்து என்ற மாநிலம் அமைக்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால கோரிக்கை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டார்ஜிலிங்கை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பிகார், வடக்கு தினஞ்பூர், தெற்கு தினஞ்பூர் மற்றும் மால்டா ஆகியவ மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இந்திய பெருநிலப்பரப்புடன் இணைப்பதில் இந்த வட மாவட்டங்கள்தான் முதன்மையானவை.
இந்தப் பின்னணியில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக்கும் கோரிக்கை. மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களுக்கும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன; தனித்துவமான பகுதிகளாக இருப்பதால் அந்த மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தாரின் கோரிக்கை.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாயா கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தை ஒரு போதும் இரண்டாகப் பிரிக்க அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தின் வடமாவட்டங்களை தனி மாநிலமாக்க வேண்டும் என்கிறார் சுகந்தா மஜூம்தார். ஆனால் மேற்கு வங்க மாநில மக்கள் இத்தகைய பிரிவினைவாத முழக்கங்களை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். இதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருந்தால் சிபிஎம், காங்கிரஸ் போல பாஜகவுக்கும் பூஜ்ஜியம்தான் கிடைக்கும். 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது. இவ்வாறு சுதீப் பந்தோபாத்யாயா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications