அயோத்தி தீர்ப்பில் இடம்பெற்ற தமிழகத்தின் சிதம்பர ரகசியம்- அருவ வழிபாடு முறை!
டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பில் தமிழகத்தின் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடைபிடிக்கப்படும் சிதம்பர ரகசியம் எனப்படும் 'அருவ வழிபாடு' முறையை மூத்த வழக்கறிஞர் பராசரன் சுட்டிக்காட்டியதும் இடம்பெற்றுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் கடவுள் சிலைகள் வைக்கப்பட்டது தொடர்பாக குறிப்பிடுகையில், இந்து மதத்தில் கடவுள் என்பது சிலை வடிவில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. சுயம்புவாகவும் இருக்கலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போல சிலைகள் இல்லாமலும் வழிபாடு நடத்தலாம் என மூத்த வழக்கறிஞர் பராசரன் சுட்டிக்காட்டியதும் இடம்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உருவமற்ற வெற்றிடத்தையே தெய்வமாக வழிபடும் நடைமுறை இருக்கிறது.
சிதம்பரம் கோவிலில் சிற்சபைக்கு (சபாநாயகருக்கு) வலப்புறத்தில் ஒரு சிறிய வாயில் இருக்கும். இங்கு தங்க வில்வதள மாலை தொங்கவிடப்பட்டிருக்கும்.
இந்த அறையில் இறைவன் ஆகாயம் எனும் பரந்தவெளியின் வடிவில் உள்ளார் என நம்பப்படுகிறது. இங்குள்ள திரை அகற்றப்பட்டு ஆராதனை காட்டப்படும்.
இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றும் அழைக்கிறோம். இந்த வழிபாட்டு முறைதான் அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications