பட்டென டெல்லி பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி... 15 நிமிடங்களுக்கு மேல் ராஜ்நாத் சிங்குடன் நடந்த சந்திப்பு
டெல்லி: திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ளார்.
7 தமிழர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதனால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியதுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியானது.

டெல்லி பறந்த ஆர்.என்.ரவி
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை டெல்லி சென்றுள்ளார். எப்போதும் டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்தில் தங்கும் ரவி, இம்முறை தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கினார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவார் என்றும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், தமிழக அரசுடனான உரசல் குறித்து விளக்கமளிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு
இதனிடையே டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசி இருக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் இலங்கை, தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து விவாதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் நிலையில் ஆளுநரின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் ஆர்.என்.ரவி. 2014 ஆம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட்டார் ஆர்.என்.ரவி. பின்னர் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்கும் முன்பே எதிர்ப்பு
நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு நாகா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை காரணம் காட்டி அவரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநராக பொறுப்பேற்ற அவர், ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவி
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என, ஆளுநரின் அதிகாரத்தை திருத்தம் செய்திட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications