மேகதாது அணை விவகாரம்- தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி பயணம்!
டெல்லி: கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடுவதற்காக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி செல்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம் காட்டி வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடகா நிதிநிலை அறிக்கையில் ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்தும் உள்ளது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கான திட்ட அறிக்கையையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் வழங்கி அனுமதி கேட்கிறது கர்நாடகா. அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். இதனால் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமான திட்ட அறிக்கையை விவாதிக்கவும் மத்திய அரசு அனுமதி தந்தது. ஆனால் இதற்கு எதிராக தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவின் மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கூடாது; காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளது தமிழகம். இதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டசபை அனைத்து கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி செல்கிறது.












Click it and Unblock the Notifications