சிவசேனா சின்னம், பெயர் ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை! தாக்கரே தரப்பின் பிளான் என்ன
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில், கட்சி பெயர், சின்னம் ஆகியவை தொடர்பாக உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே யாருமே எதிர்பார்க்காத பல அரசியல் ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான், சரத் பவாரை விட்டுவிட்டு அஜித் பவார் தலைமையில் பல எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணியில் இணைந்தனர்.
இதேபோல கடந்த ஆண்டு சிவசேனா கட்சியிலும் நடந்தது. அப்போது சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

அப்போது அவருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்ல்ஏக்கள் பாஜகவுடன் இணைந்த நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மகாராஷ்டிர முதல்வராக ஷிண்டே பொறுப்பேற்றார். அப்போது முதலே உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே என சிவசேனா கட்சி இரண்டு கோஷ்டிகளாகவே செயல்பட்டு வருகிறது.
இரு தரப்பும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தையும் நாடியிருந்தது. அப்போது சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகியவை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரே தரப்பிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு தான் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை கலகத்தை தொடங்கியிருந்த சமயத்தில் அப்போது இருந்த உத்தவ் தாக்கரே தரப்பு அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை அளித்திருந்தது. அந்த விவகாரத்தில் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது.
அந்த காலக்கெடு விரைவில் நிறைவடைய உள்ளது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சி, சின்னம் பெயர் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications