என்னது ரயிலில் வெயிட்டிங் லிஸ்டில் 2.72 கோடி பேரா.. 'ஒரு நிமிசம் தலையே சுத்திடுச்சு'.. ஆர்டிஐ தகவல்
டெல்லி: 2022 -23ம் நிதியாண்டில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் உறுதி ஆகாததால் 2.72 கோடி பேர் ரயிலில் பயணிக்க முடியவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
ரயிலில் டிக்கெட் கிடைத்த பயணிகளைவிட வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் எல்லாம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது நான்கு மாதத்திற்கு முன்பு செய்தால் தான் சாத்தியம். அப்படி செய்தாலும் மிக அபூர்வமாகவே டிக்கெட் கிடைக்கும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று இல்லை.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மாலை நேர ரயில்களில் டிக்கெட் கிடைப்பது கடினமாகும்.

வெயிட்டிங் லிஸ்ட் இல்லாத ரயிலை பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியா முழுவதுமே இதுதான் நிலைமை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரயில் தான் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்கிறது. ரயிலில் சென்றால் கட்டணம் குறைவு என்பதால், மக்கள் பலரும் ரயிலில் செல்லவே விரும்புகிறார்கள்.
ஆனால் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கூட டிக்கெட் கிடைப்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டால் தான் இந்த நிலையை மாற்ற முடியும். ஒவ்வொரு பகுதியிலும் புதிய ரயில் விடக்கோரி கோரிக்கைகள் அதிக அளவில் உள்ளன.
சரி விஷயத்திற்கு வருவோம்.. மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், காத்திருப்போர் பட்டியல் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ரயில்வே வாரியம் அளித்துள்ள பதிலில் சில தகவல்கள் கூறியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு: கடந்த நிதிஆண்டில் (2022-2023) 2 கோடியே 72 லட்சம் பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் கடைசிவரை உறுதி ஆகவில்லை. அதனால், அவர்களது 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன. அவர்களால் ரயிலில் பயணிக்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கு கட்டணம் திருப்பித்தரப்பட்டது.
இதுபோல், 2021-2022 நிதிஆண்டில், 1 கோடியே 65 லட்சம் பயணிகளும், 2020-2021 நிதிஆண்டில் 61 லட்சம் பயணிகளும், டிக்கெட் உறுதி ஆகாததால் பயணம் செய்ய முடியவில்லை. 2018-2019 நிதிஆண்டில் 68 லட்சத்து 97 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2017-2018 நிதிஆண்டில் 73 லட்சம் பி.என்.ஆர். எண்களும், 2016-2017 நிதிஆண்டில் 72 லட்சத்து 13 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2015-2016 நிதிஆண்டில் 81 லட்சத்து 5 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2014-2015 நிதிஆண்டில் 1 கோடியே 13 லட்சம் பி.என்.ஆர். எண்களும் ரத்தாகி விட்டன இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நெரிசலான வழித்தடத்தில் போதிய ரயில்கள் இயக்கப்படாததுதான், டிக்கெட் உறுதி ஆகாததற்கு காரணம் ஆகும். தற்போதைய நிலையில் சிக்னல் பராமரிப்பு, தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும், இதன்மூலம் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகமான ரெயில்கள் இயக்கும்போது, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் பெறும் வாய்ப்பு குறையும் என்றம் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications