இந்திய ஆட்டோமொபைல் துறையில் பாய்ந்த வெளிச்சம்! டிரம்ப் உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்ட வணிகர்கள்!
டெல்லி: மெக்சிகோ, கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 30 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஆட்டோமொபைல் துறையின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அவரவர் நாட்டுக்கே டிரம்ப் அனுப்பி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ மக்களை மீண்டும் மெக்சிகோவுக்கே அனுப்பினார். இதை மெக்சிகோ அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் அந்த நாட்டுக்கு 25% வரை வரியை அமெரிக்கா விதித்தது.

அதாவது இந்த வரியால், மெக்சிகோவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை 25% வரை உயரும். இந்த வரியால் இந்திய ஆட்டோ மொபைல் துறை அடிவாங்கியது. அதாவது ஆண்டுக்கு ரூ.1.84 லட்சம் கோடி அளவுக்கு இந்திய ஆட்டோ மொபைல் துறை வாகன உதிரி பாகங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் 3% அதாவது ரூ.5,719 கோடி அளவுக்கு மெக்சிகோவுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக இந்த ஏற்றுமதி திடீரென சரிந்தது.
இப்போது வரி விதிப்பு 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் பங்கு மதிப்பு உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக,
1.சோனா பிஎல்டபிள்யூ (Sona BLW Precision Forgings Ltd)
2.சம்வர்தனா (Samvardhana Motherson International Ltd),
3.Bharat Forge Ltd
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 8% வரை அதிகரித்துள்ளன. இதனை எலரா செக்யூரிட்டிஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இது பங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இதேபோன்று வரியை விதிக்காமல் இருந்தால் இந்திய நிறுவனங்கள் நஷ்டமடையாமல் இயங்கும். இருப்பினும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் இந்தியாவுக்கு லாபமும் இருக்கிறது. உதாரணமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் மொபைல், கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்பட்டால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை நோக்கிதான் வரும். எனவே, இந்தியாவுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதற்கு இந்திய நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். ஐபோன் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான அனைத்து உள்கட்டமைப்பு பணிகளையும் நாம் சரியாக செய்து வைத்திருந்தால், உலக அரங்கில் நாம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிடுவோம்.












Click it and Unblock the Notifications