டிரம்ப் தடாலடியாக அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி.. இந்தியாவுக்கு "அட்வான்டேஜ்" தான்.. எப்படி தெரியுமா?
டெல்லி: அமெரிக்க அதிபரான டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் மீதும் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் வரி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. ஆனால், இந்த வரி இந்தியாவுக்கு அட்வான்டேஜ் தான் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றப் போகிறேன் எனச் சொல்லிக் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ.. பதிலுக்கு அதே அளவுக்கு வரி விதிப்பதே ரெசிப்ரோக்கல் வரியாகும்.

டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சனிக்கிழமை முதல் முதற்கட்டமாக 10% வரி விதிக்கப்படும். அதன் பிறகு அந்தந்த நாட்டிற்கு எவ்வளவு வரி விதித்துள்ளாரோ அதைப் பொறுத்து ஏப்ரல் 9ம் தேதி முதல் வரி வசூலிக்கப்படும்.
இந்த வரி குறித்து உலகின் பல்வேறு நாடுகளும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. குறிப்பாகக் கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் பதிலடி கொடுக்கும் வகையிலும் வரிகளை அறிவித்துள்ளன. ஆனால், இந்த வரிகள் ஒரு வகையில் நமக்கு அட்வான்டேஜ்ஜாக இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கான வரி குறைவு என்பது முதல் அட்வான்டேஜ். மேலும், அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை மற்ற நாடுகளுக்கு முன்பே இந்தியா ஏற்கனவே தொடங்கிவிட்டதால் அதிலும் நன்மை கிடைக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்கு அட்வான்டேஜ்
டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை அறிவித்தார். அதேநேரம் இந்தியாவின் போட்டி நாடுகளாக அறியப்படும் சீனா (34%), வியட்நாம் (46%), தாய்லாந்து (36%) மற்றும் இந்தோனேசியா (32) மீது நாடுகள் மீது அதிக வரியை விதித்துள்ளார். அதாவது டிரம்ப் வரி ஒட்டுமொத்த வர்த்தகத்தைப் பாதிக்கும் என்ற போதிலும், இந்தியாவுக்குக் குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு அட்வான்டேஜாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இன்னொரு பிரச்சினை இருக்கே
அதேநேரம் மற்றொரு அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் இறக்குமதி வரி அதிகரித்துவிட்டதால் அங்குச் செல்ல வேண்டிய பொருட்கள் இந்தியாவில் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இது இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும். இந்த சிக்கல் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டமும் சனிக்கிழமை நடந்துள்ளது. அதில் இறக்குமதி அதிகரித்தால் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய பொருட்களைச் சீனா நிறுவனங்கள் இந்தியாவில் குவிக்கலாம். இது பிரச்சினையைத் தரும் என்பதாலேயே இந்திய அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள்.

வர்த்தக டீல்
இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்கா உடன் ஒரு வர்த்தக டீலை அமைக்க இந்திய அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் மேலும் கூறுகையில், "டிரம்ப் வரி விதிப்பைத் தொடர்ந்தே மற்ற நாடுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. ஆனால், நாம் முன்கூட்டியே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டோம்.
மேலும், அமெரிக்கா மட்டுமின்றி மொத்தம் ஏழு நாடுகள் உடன் வர்த்தக ஒப்பந்தம் போடப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் கூட நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை எல்லாம் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் போட முடியாது. அதற்கு டைம் ஆகும். பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும்" என்றார்.
உலக வர்த்தக அமைப்பு
டிரம்பின் இந்த வரி சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைக் கூட கணிசமாக இது பாதிக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், உலக நாடுகள் தங்கள் இஷ்டத்திற்கு வரிகளை விதிக்கக்கூடாது என்றும் தங்கள் மூலம் மட்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை உலக வர்த்தக அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
உலக நாடுகள்
அதேநேரம் டிரம்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரிக்கு உலகின் பல்வேறு நாடுகள் பல விதங்களில் பதிலளித்துள்ளன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா தான் முதல்முறையாகப் பதிலடி கொடுக்கும் வகையில் வரி அறிவித்தன. கனடாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34% வரியை அறிவித்துள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பதிலடி தரும் வகையில் எந்தவொரு வரியையும் அறிவிக்கவில்லை. டிரம்பின் வரி அமெரிக்காவையே பாதிக்கும் என்பதால் கூடுதல் வரியை அறிவிக்க மாட்டோம் எனச் சொல்லிவிட்டது. ஆஸ்திரேலியா சொன்னது போலவே அமெரிக்காவிலும் மக்கள் பலரும் உள்நாட்டில் விலை அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

மக்கள் போராட்டம்
இதனால் அவர்கள் இப்போதே டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கும் படை எடுத்துள்ளனர். இறக்குமதி வரி அமலுக்கு வந்தவுடன் விலை அதிகரிக்கும் என்பதால் போட்டிப் போட்டுக் கொண்டு பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். இதனால் அங்கு பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் கூட ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக அங்கு மிகப் பெரியளவில் மக்கள் போராட்டங்களும் நடந்து வருகிறது.
அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகச் சொல்லி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், புளோரிடா, கொலராடோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு அவருக்கு எதிராக நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும். அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் அமெரிக்கர்கள் டிரம்பிற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால், டிரம்ப் இதையெல்லாம் பார்த்துத் தயங்கவில்லை. தனது நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கு முதலில் கஷ்டத்தைக் கொடுத்தாலும் பிறகு நல்ல வளர்ச்சியைத் தரும் என்றும் இதனால் அமெரிக்க மக்கள் இதைக் கொஞ்சும் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications