அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன்
டெல்லி: நாங்கள் டெல்லிக்கு வந்ததில் தவறு இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? என டெல்லியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதல்வருக்கு பயம் வந்துவிடுகிறது. நாங்கள் டெல்லிக்கு வந்ததில் என்ன தவறு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா?

தமிழகத்திற்கு ரூ 12 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்திற்கு வெறும் ரூ 3 லட்சம் கோடி நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது திமுக அரசு. அதாவது மத்திய அரசு கொடுத்த நிதியை வேறு திட்டங்களுக்கு திமுக அரசு பயன்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொடுத்த நிதியை திமுக அரசு முறையாக கையாளவில்லை. அந்த ஆட்சியின் முறைகேட்டை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.
நாங்கள் டெல்லிக்கு வருவது குறித்தே அனைவரும் பேசி வருகிறார்கள். தமிழகத்தை பொருத்தமட்டில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை என பல முறை சொல்லியாகிவிட்டது. சிஎஸ்கே அணியில் தமிழர்களா விளையாடுகிறார்கள்? அது போல்தான் இதுவும்!
டெல்லி, தமிழ்நாடு என்றெல்லாம் பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது. பீகாரை போல் ஒற்றுமையாக இருந்து தமிழகத்தில் வெற்றி பெறுவோம். தீயசக்தி திமுகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசினோம். தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் பேசவில்லை. புதிய கட்சிகள் இணையாது என பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். அது போல் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்?
அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும். இவ்வாறு தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக டெல்லிக்கு நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றிருந்தார். அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 15 நிமிடம் பேசுவதற்காக 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை போயஸ் தோட்டத்தில்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று வருகிறார். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு 4 முறை டெல்லிக்கு பயணம் செய்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றதால் திமுக கூட்டணியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
அதாவது ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையை இழுத்து பூட்டு போட்டு விடலாம். தமிழகத்தில் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்றால் இங்கேயே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்திருந்தார். அது போல் "டக்ளஸ் அண்ணே அப்ப இந்த கடைக்கு ஓனர் நீ இல்லையா" என்ற காமெடியை அதிமுகவுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications