எல்லாமே அரசியல்.. சுகேஷை யாரோ இயக்குகிறார்கள்.. மாற்றி பேசுகிறார்.. நான் நிரபராதி.. டிடிவி தினகரன்
டெல்லி: இரட்டை இலை சின்னத்தில் லஞ்சம் பெற முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை யாரோ இயக்குகிறார்கள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற முயற்சித்த வழக்கில் அமலாக்கத் துறை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து அவரை 15-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
அவர் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணையின் போது டிடிவி தினகரனிடம் ரூ 2 கோடி பெற்றதாக சொல்லியிருந்த நிலையில் தற்போது இரட்டை இலை சின்னத்தை பெற தனக்கு டிடிவி தினகரன் ரூ 10 கோடி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினகரன்
இதன் பேரில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு சென்ற அவரிடம் இரட்டை இலைக்கு லஞ்சம் தொடர்பாகவும் சுகேஷ் கூறிய வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன.

சுகேஷ் சந்திரசேகர்
டிடிவி தினகரனை ஒரு அறையிலும் சுகேஷை இன்னொரு அறையிலும் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. டிடிவி தினகரனை இரவு 11 மணிக்குத்தான் விசாரணையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.

இரட்டை இலைக்கு லஞ்சம்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இரட்டை இலைக்கு லஞ்சம் தொடர்பான வழக்கில் நான் நிரபராதி. சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் விசாரணையின் போது ஒவ்வொரு வாக்குமூலம் அளித்து வருகிறார். அந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். அது அவர்களது கடமை.

வாக்குமூலம்
சுகேஷை யாரோ இயக்குகிறார்கள். அவர் வேண்டுமென்றே என்னை சிக்க வைக்க மாற்றி மாற்றி வாக்குமூலம் அளிக்கிறார்கள். அவர் பின்னால் இருப்பது யார் என தெரியவில்லை.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஆஜராவேன். வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications