கரூர் வழக்கு சிபிஐக்கு மாறியது பெரிய விஷயமே இல்லை.. எது முக்கியம் தெரியுமா?- தராசு ஷியாம் கருத்து
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதன்பின் தவெக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் மகேஷ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பை வழங்கினர். அதில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பு வழங்கினர்.
அதுமட்டுமல்லாமல் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜஸ் தோஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது. தவெகவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உண்மைகள் வெளி வரும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை, அப்போது வைக்கப்பட்ட வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியாமலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது என்று கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் இன்று நடந்துள்ள திருப்பங்கள் தீர்ப்பின் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதன்பிறகும் சட்டப்போராட்டம் தொடரும். சிபிஐ விசாரணை, ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரணை என்பது பெரிய விஷயமல்ல. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரித்தாலும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரித்தாலும் இரண்டுமே ஒன்றுதான். இது இப்போதும் உண்மையை கண்டறியும் குழுதான்.
ஓய்வுபெற்ற நீதிபதி, விசாரணை ஆணையம் ஆகியவை செய்வது கிரிமினல் விசாரணை அல்ல. ஆனால் எஸ்ஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்வது கிரிமினல் விசாரணை. என்னதான் நாம் பேசினாலும், வெள்ளிக்கிழமை நடந்த விவாதங்கள் அடிப்படையில் 30 மணி நேரத்திற்கு முன்பே தீர்ப்பு தயாராகிவிட்டது. அதனை இன்று நீதிபதிகள் வாசித்திருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பும் இடைக்கால தீர்ப்பு தான். இதில் அடுத்ததாக மாற்றம் கூட வரலாம். ஆனால் நீதிமன்றத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்காளால் முன் வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும், நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அது மிகவும் ஆபத்தானது என்பது என் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications