டெல்லி கலவரம்! டைம்ஸ் நவ் விவாதங்களுக்கு குட்டு! வீடியோக்களை நீக்க தடாலடி உத்தரவு!
டெல்லி: டெல்லி கலவரம் குறித்து டைம்ஸ் நவ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய இரு விவாதங்களும் நடுநிலையோடு இல்லை என்பதால் அதுகுறித்து வீடியோக்களை யூடியூபிலிருந்து நீக்குமாறு தேசிய ஒலிபரப்புத் துறை மற்றும் டிஜிட்டல் தரநிலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமா மசூதி மற்றும் ஷாகீன்பாக் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. அப்போது அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி கலவரம் நடத்தப்பட்டது. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா, ஷாகீன்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்றுமாறு டெல்லி காவல் துறையிடம் கேட்டுக் கொண்டார். காவல் துறை அதை செய்யவில்லை என்றால் நானே அவர்களை வெளியேற்றுவேன் என கூறியிருந்தார். இதனால் அங்கு மோதல் வெடித்தது. 3 பள்ளிவாசல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

வாகனங்கள், கடைகள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு டிவி சானல்களில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் டைம்ஸ் நவ் டிவி சேனலில் நெறியாளர்கள் ராகுல் சிவசங்கர் மற்றும் பத்மஜா ஜோஷி ஆகியோர் விவாதம் நடத்தினர்.
ஆனால் இவர்கள் நடத்திய விவாதம் நடுநிலையோடு இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விவாதம் என தேசிய ஒலிபரப்புத் துறை மற்றும் டிஜிட்டல் தரநிலை ஆணையத்தில் உத்கார்ஷ் மிஸ்ரா என்பவர் புகாரளித்தார். மேலும் ஆணையத்தால் வழங்கப்பட்ட நெறிமுறைகளையும் வழிமுறைகளையும் ஒலிபரப்பு வழிகாட்டுதல்களையும் நெறியாளர்கள் மீறிவிட்டனர்.
இதுகுறித்து உத்கார்ஷ் மிஸ்ரா அளித்த புகாரில், கலவரத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டக்காரர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை போல் இருந்தது. டெல்லி போலீஸ் விசாரணையை விமர்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை முன் வைத்தே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெறியாளரின் உரையாடல்கள் பாஜக செய்தி தொடர்பாளருடனேயே இருந்தது. சிஏஏ கலவரம் குறித்து தவறான தகவலை பரப்பியவர்களுடனேயே நடத்தப்பட்ட இந்த உரையாடலை பார்க்கும் மக்கள் எதை உண்மை என நம்புவார்கள் என கேள்வி எழுப்பினார். வலது சாரி விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட மற்றவர்களுக்கு அந்த விவாதத்தில் பேசுவதற்கு நேரம் குறைவாகவே கொடுக்கப்பட்டது. அப்படியே அவர்கள் பேசினாலும் நெறியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பாஜக செய்தித் தொடர்பாளரிடம் கருத்து கேட்டனர். எனவே இந்த விவாதங்களில் பாரபட்சமுள்ளது என மிஸ்ரா புகார் அளித்தார்.
இதையடுத்து தேசிய ஒலிபரப்புத் துறை மற்றும் டிஜிட்டல் தரநிலை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே சிக்ரி அந்த விவாத வீடியோக்களை யூடியூப்பிலிருந்தும் டைம்ஸ் நவ் சேனலிலிருந்தும் நீக்குமாறு கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications