ஏர் இந்தியா விமான விபத்து.. உடல்கள் மாறி வந்துவிட்டது.. இறுதிச்சடங்கை நிறுத்திய இங்கிலாந்து குடும்பம்
அகமதாபாத்: கடந்த மாதம் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த 53 பேரும் பலியாகினர். இவர்கள் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதில் 2 உடல்கள் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். மற்ற அனைத்து பயணிகளும் பலியாகினர்.

260 பேர் உயிரிழப்பு
ஏர் இந்தியா விமானம் மருத்துவக்கலூரி விடுதி ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியதில் அங்கு இருந்தவர்களும் சிலர் பலியாகினர். மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்ததில் தீ பிடித்தது. இதனால், பயணிகள் பலரது உடலும் தீயில் கருகின. இதன் காரணமாக உடலை அடையாளம் காணுவதில் கூட சிக்கல் ஏற்பட்டது. அடையாளம் காண முடியாத உடல்களை டிஎன்ஏ பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 56 பேரும் பலியாகினர். அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியை ஏர் இந்தியா நிர்வாகத்துடன் இணைந்து மத்திய அரசு ஈடுபட்டது. இந்த நிலையில்தான், விமான விபத்தில் பலியான இருவரின் உடல்கள் மாற்றி தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அவர்களின் வழக்கறிஞர் கூறியதாவது:-
இறுதி சடங்கு நிறுத்தப்பட்டது
"இந்தியாவில் இருந்து 24 முதல் 26 உடல்கள் வந்தன. இந்த உடல்களுக்கு பிரிட்டனில் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு சடலங்கள் உறவினர்கள் மாதிரிகளுடன் ஒத்து போகவில்லை. தங்களின் உறவினர்கள் சடலங்கள் இல்லை என்று தெரிந்ததும் இறுதிசடங்கை கைவிட்டுள்ளனர். ஒரு சவப்பெட்டியில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உடல் பாகங்கள் இருந்தன" என்று தெரிவித்துள்ள்னர்.
இதற்கிடையே, இந்த பிரச்சினைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஏர் இந்தியா கை விரித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில், "அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து சீல் வைக்கப்பட்ட பெட்டியில் உடல்கள் கொடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில்,, "விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மிகுந்த தொழில் நேர்த்தியுடனும், கண்ணியத்துடனும் கையாளப்பட்டன. அடையாளம் காண்பதற்கான அனைத்து நெறிமுறைகளளும் பின்பற்றப்பட்டது. அதன்பிறகே உடல்கள் ஒப்படைக்கப்பட்டன" என்று விளக்கமளித்துள்ளது.
எனினும், பிரிட்டன் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து கவனமாக பணியாற்றி வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 169 பேர் ஆவர். 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications