மாத சம்பளதாரர்களை ரூ.17,500 மிச்சம்பிடிக்க வைத்த நிர்மலா அறிவிப்பு! இந்த பட்ஜெட்டில் இன்னும் கூடுமா?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி ஏற்றத்தினால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்க, வருமான வரி அடுக்குகள் மற்றும் நிலையான விலக்கு (Standard Deduction) அதிகரிப்பு குறித்து அரசு முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.

தற்போதைய வரி கட்டமைப்பு
புதிய வரி முறையில் (New Tax Regime) ரூ.3 லட்சம் வரை அடிப்படை வரி விலக்கு உள்ளது. எனினும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த வரம்பு பயனற்றதாக விமர்சிக்கப்படுகிறது. சிறு வரி செலுத்துவோருக்கு சலுகை தரும் வகையில் இந்த வரம்பை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிபுணர் கருத்து
கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனத்தின் அகில் சந்த்னா கூறுகையில், "ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விகிதங்களைக் குறைக்கலாம். பழைய மற்றும் புதிய வரி முறைகள் இரண்டிலும் இது பயனளிக்கும். மேலும், சம்பளத்தின் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு நிலையான விலக்கை அறிமுகப்படுத்தினால், வெவ்வேறு வருமான பிரிவினருக்கு நியாயமான நன்மை கிடைக்கும்" என்றார். மருத்துவ காப்பீடு, வீடு கடன் வட்டி போன்ற தேவையான செலவுகளுக்கான கூடுதல் விலக்குகளும் புதிய வரி முறையை தேர்வு செய்ய உதவக் கூடும் என அவர் தெரிவித்தார்.
முந்தைய மாற்றங்கள்
2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், நிலையான விலக்கு (Standard Deduction) ரூ.50,000-இலிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டது. நிலையான கழித்தல் அல்லது நிலையான விலக்கு என்பது வரி விதிக்கக்கூடிய சம்பள வருமானத்திலிருந்து கழிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையாகும். வரி செலுத்துவோர் இதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. வரி விதிப்புக்கு உள்ளாகும் வருமானத்தைக் குறைக்க இந்த தொகை அனுமதிக்கிறது. இது ஒரு போனஸ் மாதிரி. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2024 இல் தனிநபர்களுக்கான நிலையான கழித்தலை ₹50,000 லிருந்து ₹75,000 ஆக அதிகரிப்பதாக அறிவித்தார், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17,500 வரை வரிச்சேமிப்பு ஏற்பட்டது. 72% வரி செலுத்துவோர் புதிய முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்புகள்
கிராண்ட் தோர்ன்டனின் கணக்கெடுப்பின்படி, 63% வரி செலுத்துவோர் பழைய முறையில் விலக்கு வரம்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். வரி விகிதங்களில் மாற்றம், உயர் வருமானம் பெறுவோருக்கான கூடுதல் விலக்குகள் போன்ற முன்மொழிவுகள் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications