ரொம்ப முக்கியம்.. விரைவில் மழைக்கால கூட்டத்தொடர்! இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடும் கேபினட்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட இருக்கும் நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்க உள்ளது. ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்ற பெருமையை இது பெறுகிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்து இதில் வியூகம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் இந்த கூட்டத் தொடரில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை கேட்டு உள்ள மத்திய சட்ட ஆணையம் ஜூலை 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தது.
திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் அதிமுகவும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எனவே இதுபற்றி மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.
அதேபோல், டெல்லி மாநில அரசின் அதிகாரத்தினை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் திரிபுராவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் வகுப்புவாத மோதல்கள், பழங்குடியின கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றை எதிர்கட்சிகள் கிளப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில் அதனை கையாள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியானது.
அது தொடர்பாகவும், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்து இருக்கும் நிலையில் தேர்தல் வியூகங்கள் பற்றியும் இந்த கேபினட் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களிடம் ஆலோசிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications