‛‛கருணாநிதி நினைவு நாணயம்’’.. நிர்மலா சீதாராமன் தந்த அனுமதி.. இந்தியில் இடம்பெறும் முக்கிய வாசகம்
டெல்லி: தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி வழங்கி உள்ளார். இந்தியை திணிப்பதாக திமுக தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த நாணயத்தில் இந்தி மொழியில் முக்கிய வாசகம் இடம்பெற உள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தாள் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் திமுகவினர் கொண்டாடி வந்தனர். இதையொட்டி'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது.

அதாவது இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்கள், முக்கிய நிகழ்வுகளின் நினைவாக நாணயம் என்பது மத்திய நிதி அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கருணாநிதிக்கும் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதாவது ரூ.100 மதிப்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அனுமதி கோரப்பட்டது. கடந்த ஜுன் 3ம் முடிந்த கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழாவில் வெளியிடும் முயற்சியில் இந்த அனுமதி கோரப்பட்டது.
ஆனால் அனுமதி என்பது உடனடியாக கிடைக்கவில்லை. நினைவு நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாததால் மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துள்ள நிலையில் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்தார்.
இதற்கான உத்தரவு என்பது விரைவில் கெஜட்டில் வெளியாக உள்ளது. இந்த நினைவு நாணயத்தில் 'டாக்டர் கலைஞர் மு கருணாநிதி' என்றபெயருடன், 'தமிழ் வெல்லும்' எனும் வாசகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற உள்ளது. மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கருணாநிதியின் நினைவு நாணயத்திலும் இந்தி மொழி இடம்பெற உள்ளது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒரு தலைவருக்கு இப்படி நினைவு நாணயம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல தலைவர்களுக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டவர்களுக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கை என்பது 2020ம் ஆண்டில் வைக்கப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் கடந்தும் கூட அந்த கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. அதாவது இன்னும் ஜெயலலிதாவுக்கு நினைவு நாணயம் என்பது வெளியிடப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் அவருக்கு நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் நேற்றைய தினம் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுநாணயத்துடன், மேலும் இரண்டுநாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதாவது உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களையும் அச்சிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications