"வெங்காயம்".. மீண்டும் வாயை விட்ட நிர்மலா சீதாராமன்.. “ஆச்சாரத்தின் அடையாளம்”.. சு.வெங்கடேசன் சுளீர்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வெங்காயம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(டிச.12) கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ல் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் குறித்து கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது, 2019ம் ஆண்டு இதே டிசம்பரில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. வெங்காய விளைச்சல்கள் அதிகம் இருக்கும் மாநிலங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன.

2019 நிகழ்வு
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆசியாவில் பெரிய வெங்காய மண்டி இங்குதான் இருக்கிறது. இந்நிலையில், இங்குள்ள சிலர் வெங்காயத்தை பதுக்கல் செய்ததால் செயற்கையான தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இது குறித்து அந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சுப்ரியா சுலே இது தொடர்பாக, "வெங்காய பதுக்கல் காரணமாக விலை தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கிடையில் மற்றொரு எம்.பி, "நீங்களும் வெங்காயம் சாப்பிடுபவர்கள்தானே. உங்களுக்கு இந்த பாதிப்பு தெரியவில்லையா?" என்று கேள்வியெழுப்பினார்.

வெங்காயம்
இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், "நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடும் குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. எனவே இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். விலையை பொருத்த அளவில் அதனை கட்டுக்குள்கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடைய குடும்ப பெருமையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் கூறுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதெல்லாம் பழைய கதை. இந்நிலையில் சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வெங்காயம் குறித்து இன்று அவர் கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெட்கப்பட வேண்டும்
பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் இன்று தொடர் விமர்சனத்தை முன்வைத்திருந்தன. இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், "2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானபோது நாட்டின் பொருளாதாரம் ICUவில் இருந்தது. ஆனால் இன்று பெரிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வந்தாலும் நமது நாடு பொருளாதாரத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால் சிலரால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. இவர்கள் நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

கண்டனம்
இந்த வளர்ச்சியை கண்டு பெருமையடைவதற்கு பதிலாக, இதனை அவர்கள் வேடிக்கை பார்த்து கேலி செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பேச்சும் இதேபோல கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. நான் 'வெங்காயம்' சாப்பிட மாட்டேன். ஆனால் வெங்காயம் சாப்பிடுபவர்களின் பிரச்சனைகளுக்காகவும் பேசுகிறேன்" என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்
இது குறித்து தனது டிவிட்டரில், "நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன். ஆனால் வெங்காயம் சாப்பிடுபவர்களின் பிரச்சனைகளுக்காகவும் பேசுகிறேன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் கூறினார். இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம். உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல. சனாதனம் பற்றியது அமைச்சரே" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications