குஜராத்துக்கு ரூ.608 கோடி.. தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.33 கோடி.. மத்திய அரசின் விளையாட்டு நிதி!
டெல்லி: மத்திய அரசு சார்பாக விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில், தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கிரிக்கெட்டைக் கடந்து தடகளப் போட்டிகளிலும் ஆர்வம் செலுத்தி வருவதால், ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்தியா சாதித்து வருகிறது.
இன்றுடன் முடிய உள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தமாக 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 55 பதக்கங்களை குவித்து 5வது இடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிப்பதற்கு மத்திய அரசின் முன்னெடுப்பே முக்கியக் காரணம் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல் சர்வதேச தொடர்களை இந்தியாவில் நடத்தவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே ஹாக்கி தொடர்களை ஒடிசா மாநிலமும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடும் நடத்தி வருகின்றன. இதனால் விளையாட்டு மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பதோடு, மறைமுகமாக தொழில் முதலீடுகளையும் ஈர்க்கலாம் என்று மாநில அரசுகள் நம்புகின்றன.
இந்த நிலையில் மாநிலங்களில் உள்ள விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய பாஜக அரசு சார்பாக ஒதுக்கப்பட்ட நிதியில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிள்ளியும் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும், ஊக்கப்படுத்தவும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று லோக் சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ, குஜராத் மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.608.37 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.503 கோடியும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.183 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் கர்காடகா மாநிலத்திற்கு ரூ.128 கோடியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ.112 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.110 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை ஆந்திர பிரதேசம், அஸாம், பீகார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களை விடவும் குறைவாகும்.
அதேபோல் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையில் டெல்லியில் அதிகபட்சமாக 121 பேரும், அசாமில் 56 பேரும், தமிழ்நாட்டில் 18 பேரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது