நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்
டெல்லி: ஈரான் போரால் நம் நாட்டில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது ESMA சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், கியாஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில், இந்தியா 31.3 மில்லியன் டன் எல்பிஜி கியாஸை பயன்படுத்தியது. நுகர்ந்தது. இதில் 12.8 மில்லியன் டன் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. மீதமுள்ள 85-90% இறக்குமதிகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்குள் வந்தது. தற்போது இந்த சேவை தான் பாதிக்கப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு
இதனால் நம் நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்நிலையில் தான், நம் நாட்டில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் புக்கிங்கிற்கு 21 நாட்கள் முதல் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம்
மேலும் வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டர் விநியோகம் செய்வதை விடுத்து வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் கியாஸ் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மத்திய அரசு Essential Commodities Act (EC ACT) எனும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை இன்று அமல்படுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
7 ஆண்டு வரை சிறை
இந்த Essential Commodities ACT, 1955ன் படி சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் கூடுதலாக ஓராண்டு வரை சிறை தண்டனையை நீட்டிப்பு செய்ய முடியும். மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறினால் சம்பந்தப்பட்ட தொழிலை முடிக்க முடியும். இது 'எஸ்மா' சட்டத்தின் ஒருபகுதியாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்த்தால் சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல், தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதிகபட்ச விலைக்கு கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்தல் உள்ளிட்டவை இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
'எஸ்மா'வின் கீழ்
முன்னதாக கியாஸ் தட்டுப்பாட்டால் மத்திய அரசு ESMA சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ESMA (Essential Services Maintenance Act) என்பது அத்தியாவசிய பணிகளுக்கான கட்டுப்பாட்டு சட்டமாகும். மக்களின் அத்தியாவசிய சேவைகளில் பிரச்சனை ஏற்படும்போது இது கொண்டு வரப்படும். தற்போது கியாஸ் சிலிண்டருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள கியாஸ் விநியோகத்தை நூறு சதவீதம் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கியாஸ் சப்ளையை சரிசெய்ய..
அதன்படி குழாய் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் பிஎன்ஜி, வாகனங்களுக்கான சிஎன்ஜி, வீட்டு சிலிண்டர்களுக்கான எல்பிஜி உள்ளிட்டவற்றை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை பயன்படுத்தி எல்பிஜி கியாஸ் தயாரிக்க முடியும். இதனால் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக எல்பிஜி கியாஸ் உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பற்றப்பட வேண்டியது என்ன?
இந்த உத்தரவு என்பது ESMA சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது புரோப்பேன், பியூட்டேன் உள்ளிட்டவற்றை நம் நாட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் பிற பெட்ரோ கெமிக்கல்கள் உற்பத்திக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
'எஸ்மா' சட்டத்தை மீறினால் பிடிவாரண்ட் இன்று கைது செய்யவும், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும் முடியும். எஸ்மாவை தொடர்ந்து இன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (Essential Commodities Act) கொண்டு வரப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் நிலவும் கியாஸ் தட்டுப்பாட்டை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications