ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ100 உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ100 உயர்த்த மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2022-23 காலத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் நெல்லின் தற்போதைய விலையான ரூ.1940-லிருந்து ரூ.2040-ஆகவும், ஏ கிரேடு நெல் ரகங்கள் விலை ரூ.1960-லிருந்து ரூ.2060-ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு என்ன?
கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ.3,578 ஆகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,962 ஆகவும், பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.7,755 ஆகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,600 ஆகவும், நிலக்கடலையின் விலை குவிண்டாலுக்கு ரூ.5,850 ஆகவும், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஒப்பந்தம்
மேலும் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக புதுப்பிக்கவல்ல எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.

ஆஸி, அமெரிக்கா ஒப்பந்தங்கள்
அதேபோல் நகர்ப்புற நீர் நிர்வாகத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2021 டிசம்பரில் கையெழுத்தானது. மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், அமெரிக்காவின் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்னெடுப்பு, இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையேயான சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications