"இந்தியா" அணியின் "அரசியல் சாசனம்" போராட்டத்துக்கு மோடி பதிலடி- ராஜ்யசபாவில் அதிரடி அறிவிப்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக 'அரசியல் சாசன' புத்தகத்துடன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாடுவோம்" என்பதுதான் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு.
லோக்சபா தேர்தலின் போது அரசியல் சாசனத்தை முன்வைத்து கடுமையான பிரசாரங்கள் நடைபெற்றன. 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தைத் திருத்துவோம் என பாஜக தலைவர்கள் பேசினர். இதையே தேர்தல் பிரசாரமாக ஆயுதமாக கையிலெடுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள், அரசியல் சாசனம் திருத்தப்பட்டால் இடஒதுக்கீடு பறிபோகும் என்றனர். இந்த பிரசாரம் பாஜகவுக்கு நெருக்கடியையும் கொடுத்தது.

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் ஏந்தியபடியே உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசனத்தையே அரசியல் ஆயுதமாக இந்தியா கூட்டணி பயன்படுத்துவதற்கு ராஜ்யசபாவில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்வது சிறப்பான, மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள். அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தைப் புகழ்ந்த திரு மோடி, இந்திய அரசியலில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர்கள் நாட்டுக்குத் தொண்டாற்ற வாய்ப்பைப் பெறுவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளால் தான். நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்தபோது எதிர்த்தனர். 75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அரசியல் சாசனத்தின் எழுச்சியையும், நோக்கத்தையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொண்டு சென்று அது பற்றி தெரிந்து கொள்வதை உறுதி செய்ய இருக்கிறோம் என்றார்.
மேலும் கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள், உரைகள் போன்ற போட்டிகளில் நமது மாணவர்களிடையே ஏற்பாடு செய்வதன் மூலம் அரசியல் சாசனத்தின் பல்வேறு முகங்கள் பற்றிய புரிந்துணர்வையும் நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications