ஆமாம் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது.. முதல் முறையாக மத்திய பாஜக அரசு ஒப்புதல் வாக்குமூலம்!
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என மத்திய பாஜக அரசு முதல் முறையாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவபடிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 5-ந் தேதி 4750 மையங்க்களில் நடைபெற்றது. மொத்தம் 571 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வுக்கு 20.38 லட்சம் மானவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 11.45 லட்சம் மாணவர்களே நீட் நுழைவுத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். நாட்டில் மொத்தம் 540-க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 80,000-க்கும் அதிகமான மாணவர் இடங்கள் உள்ளன. இந்த மாணவர் இடங்களுக்குதான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது

ஆனால் நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டே இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 720க்கு 720 மதிப்பெண்களை 67 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில் 7 மாணவர்கள் ஹரியானாவின் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள். மேலும் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இவை அனைத்துமே நீட் தேர்வு குறித்து பெரும் சர்ச்சையாகின. பல இடங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.
இதனாலேயே பல மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. வட இந்திய மாநிலங்களிலும் தென்னிந்திய மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. இதில் உச்சநீதிமன்றமும் தலையிட்டு வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியது. நீட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் வலியுறுத்துகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்துகிறார்.
ஆனால் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications