இனி ஆண்டுக்கு இரு முறை 10th, +2 பொதுத்தேர்வு.. மாணவர்கள் விருப்பம் போல எழுதலாம்.. வந்த செம அறிவிப்பு
டெல்லி: புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஆண்டிற்கு இரண்டு முறை 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதில் மாணவர்கள் தங்கள் விருப்பம் போல ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேற்குல நாடுகள் உடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் உள்ள மாணவர்களுக்கு அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தேர்வு காலங்களில் மனஅழுத்தம் ரொம்பவே அதிகரிக்கும்.

இதைக் குறைக்கவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வரும் 2025-26ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுமாம்.
பொதுத்தேர்வு: ஆனால், கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் இரண்டு முறையும் பொதுத்தேர்வை எழுத தேவையில்லை, இரண்டில் எதாவது ஒரு முறை பொதுத்தேர்வை எழுதினால் போதும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆடிட்டோரியத்தில் நடந்த PM SHRI என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மாணவர்களுக்குத் தேர்வு சமயம் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவே 2020 புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த புதிய விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் மாணவர்கள் விருப்பம் போலத் தேர்வை எழுதலாம். இதன் மூலம் தேர்வால் ஏற்படும் அழுத்தம் குறையும்.
தரம் உயர்த்தப்படும்: சத்தீஸ்கரில் நடந்த PM SHRI என்ற நிகழ்ச்சியில் தான் தர்மேந்திர பிரதான் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். இந்த PM SHRI திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 211 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். பள்ளிகளில் ஆண்டுதோறும் 10 நாட்கள் எந்தவொரு புத்தகமும் எடுத்து வராமல் இருக்கும் திட்டத்தை அமல்படுத்தும் யோசனை இருப்பதாகக் கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், 2025-26 கல்வி அமர்வில் இருந்து, மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இது மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகச் சிறந்த நேரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இரண்டு தேர்வுகளில் எந்தத் தேர்வில் மாணவர்கள் அதிக மார்க் பெற்றார்களோ அதைத் தக்கவைத்தும் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் வேண்டாம்: இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.. தரமான கல்வி, மாணவர்களுக்குக் கலாச்சாரத்துடன் இணைத்து கல்வி தருவது என்று பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை அனைத்தும் இந்த புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இது மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்தும். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான ஃபார்முலா இதுதான்.
முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கல்விக்கு அதன் முன்னுரிமை தரவில்லை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த PM SHRI திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சத்தீஸ்கரில் 211 பள்ளிகள் (193 தொடக்க நிலை மற்றும் 18 மேல்நிலைப் பள்ளிகள்) மேம்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொன்றிற்கும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications