தயாநிதி மாறனின் சமஸ்கிருதம் பற்றிய பேச்சு தேவையற்றது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அட்டாக்
டெல்லி: லோக்சபாவில் எம்.பிக்கள் பேசுவது உடனுக்குடன் மேலும் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தபோது, திமுகவின் தயாநிதிமாறன் சமஸ்கிருதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தயாநிதி மாறனின் இந்த கருத்து தேவையற்றது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்கள் உள்ளதால், உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசினாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், மொழிபெயர்ப்பு செய்யப்படும் வசதி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது உடனுக்குடன் மேலும் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது என லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் எம்.பிக்களின் பேச்சுக்கள் மொழிபெயர்க்கப்படும் நிலையில், கூடுதலாக உருது, மணிபுரி, போடோ, டோக்ரி, சமஸ்கிருதம் மற்றும் மைதிலி ஆகிய மொழிகளிலும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகின்றன என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட திமுக எம்பி தயாநிதி மாறன், சமஸ்கிருதத்தில் ஏன் மொழிபெயர்க்க வேண்டும் எனவும் சமஸ்கிருத மொழியில் மொழி பெயர்ப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் எனக் கூறினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, சமஸ்கிருதம் இந்தியாவின் மூல மொழி என குறிப்பிட்டார். அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை மொழிபெயர்க்க உள்ளோம். இதில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பதால் என்ன பிரச்சனை?" எனக் கேள்வி எழுப்பினார். லோக்சபா சபாநாயகர் - திமுக எம்.பி தயாநிதி மாறன் இடையேயான இந்த விவாதத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தயாநிதி மாறன் கருத்து தேவையற்றது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது:- சமஸ்கிருதம் தொடர்பான தயாநிதி மாறனின் கருத்து தேவையற்றது.
தயாநிதி மாறனின் கருத்து மோசமானது மட்டுமின்றி, நாட்டின் பாரம்பரிய மொழி விவகாரத்தில் திமுகவின் செலக்டிவ் கோபம், பாசாங்குத்தனத்தை காட்டுவதாக உள்ளது. பிரிவினை அரசியலில் ஈடுபடுவதுதான் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் ஆகும்" என்று சாடியுள்ளார். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவை பாராட்டியுள்ள தர்மேந்திர பிரதான், இந்திய மொழிகளுக்கு இடையே வெறுப்பைத் தூண்டி தவறாக இரு பிரிவை உருவாக்கும் முயற்சியை சபாநாயகர் சரியான முறையில் கண்டித்துள்ளார்" என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications