மகிந்த ராஜபக்சே, ஈழத் தமிழ் தலைவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! சிங்கள எம்பி குமுறல்!
டெல்லி: இலங்கைக்கு ஒருநாள் பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோரை சந்தித்தார். இதன் பின்னர் நேற்றே கொழும்பில் இருந்து டெல்லி திரும்பினார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். ஆனால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் 'சில மணிநேர' இலங்கை பயணம் தொடர்பாக சிங்கள எம்பி விமல் வீரவன்ச சந்தேகங்களை எழுப்பி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் பதவியேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இலங்கைக்கு நேற்று சென்றார்.

இலங்கை சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் போது பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எரான் விக்கிரமரத்ன, பழனி திகாம்பரம், ரவூப் ஹகீம், நிரோஷன் பெரேரா மற்றும் வீ இராதாகிருஷ்ணன் எம்பிக்களும் உடனிருந்தனர். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.யூ.எம் அலி சப்ரியுடனும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

மகிந்த ராஜபக்சேவுடனான சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில், மகிந்த ராஜபக்சேவுடன் இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சே தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டுகள் என தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இதேபோல இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது. வேலுகுமார், உதயகுமார், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் அரவிந்த குமார், வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஈழத் தமிழர் தலைவர்களான சாணக்கியன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன், விக்னேஸ்வரன், அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றே நாடு திரும்ப்விட்டார். இந்த நிலையில் மத்திய ஜெய்சங்கரின் இலங்கை பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிங்கள எம்பியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அதானி குழுமத்தின் காற்றாலை திட்டத்தை இலங்கையில் அமைப்பது உள்ளிட்ட 12 திட்டங்கள் குறித்து விவாதிக்கவே ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொண்டார். ஜெய்சங்கரின் சில மணிநேரம் குறித்த வெளிப்படைத் தன்மை தேவை என தெரிவித்து பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது, இந்திய - இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து நிகழ்நிலை ஊடாக திறந்துவைத்தனர்.

கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் திறக்கப்பட்டது. கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும். இவ்வாறு இலங்கை ஜனாதிபதி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications