இலங்கையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்- உற்சாக வரவேற்பு- தமிழ் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சு!
டெல்லி: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று ஈழத் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். மாலத்தீவுகளுக்கான பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இலங்கை சென்றடைந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கை அமைச்சர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்றனர். பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் கொழும்பில் திருப்திகரமான ஒருசந்திப்பு இடம்பெற்றது.இச்சந்திப்பில் உட்கட்டமைப்பு,தொடர்புகள், எரிசக்தி,தொழில்துறை மற்றும் சுகாதாரம் போன்றவிடயங்களில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மீட்சியினை துரிதமாக்கும் நோக்குடன் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதில் எமது அர்ப்பணிப்பு குறித்தும் இச்சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications