பெரிய பிளான்.. மிக முக்கியமான "கூட்டுறவுத்துறை" இலாகாவை கையில் எடுத்த அமித் ஷா.. என்ன காரணம்?
டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மத்திய அமைச்சரவையில் இன்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றுக்கு 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து நேற்று கூட்டுறவுத்துறை என்ற புதிய மத்திய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூடுதலாக கவனிக்க உள்ளார்.

மத்திய ஒதுக்கீடு
கூட்டுறவுத்துறைக்கு இதுவரை மத்திய அமைச்சரவையில் இடமில்லை. ஏனென்றால் கூட்டுறவுத்துறை என்பது மாநிலங்களின் கீழ் வர கூடியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த துறை கிடையாது. மாநிலங்கள் மட்டுமே தனியாக கவனிக்கும் துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை இருந்தது. தற்போது இதற்கு மத்திய அரசு புதிய துறையை உருவாக்கி உள்ளது.

நேரடி அமைச்சர்
அதிலும் இந்த துறைக்கு அமித் ஷா போன்ற வலுவான அமைச்சர் நேரடியாக அமைச்சர் ஆகியுள்ளார். இந்தியாவில் பல வளர்ந்த மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மிகுந்த வளர்ச்சி அடைந்து உள்ளது.

குறிக்கோள்
இந்த நிலையில் ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறை வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை மத்திய அரசின் இந்த துறை பறிக்குமோ, அல்லது மாநில வருவாயை பங்குபோடும் திட்டமோ என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. வளர்ந்த மாநிலங்கள் கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி ஈட்டி வரும் நிலையில் மத்திய அரசு இதில் குதித்துள்ளது.

கட்டுப்பாடு
பல்வேறு மாநில துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது. சுகாதாரம் போன்ற மாநில துறைகளில் கூட நீட் தேர்வுகள் மூலமும், கொரோனா காரணமாகவும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத்துறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications