ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல்! நாங்க ரெடி நீங்க ரெடியா..? மாநிலங்களை கேட்கிறார் மத்தியமைச்சர் பூரி..!
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை, ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வருவதை மகிழ்ச்சியுடன் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது எனவும், ஆனால் மாநிலங்கள் தயராக இல்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களில் 15க்கும் மேற்பட்ட முறை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக விலை உயர்வு இல்லாத நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105.41 ரூபாயாகவும், டீசல் 96.67 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 120.51 ஆகவும், டீசல் லிட்டருக்கு 104.77 ஆகவும் விற்கப்படுகிறது.
காரை நிறுத்துங்க.. திடீரென சொன்ன முதல்வர்.. இறங்கியதும் கேட்ட கேள்வி.. தேனியில் என்ன நடந்தது?
பெட்ரோல், டீசல் விலை
கொரோனா காரணமாக ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள் தற்போது தான் ஓரளவு மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் டீ காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அல்லாத கட்சிகள் மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை எனவும், இதனால் தான் அங்கு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ளதாகவும், மக்களின் சுமையை குறைக்க வாட் வரியை குறைக்க வேண்டும் என கூறினார். இதனிடையே எரிபொருள் வரி தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதில் மத்திய அரசு மகிழ்ச்சி அடைவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
ஹர்தீப் சிங் பூரி பேச்சு
இதுகுறித்து பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதில் மத்திய அரசு மகிழ்ச்சியடையும் என்பது எனது புரிதல். ஆனால் மாநிலங்கள் அதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. பெட்ரோல், டீசல் மற்றும் மதுவின் மூலம் கிடைக்கும் வருவாயில் மக்களை வதைக்கிறார்கள்... கடன் அதிகரிக்கும் போது அவர்கள் மற்றவர்களைக் குறை கூறுகிறார்கள்... உதாரணத்திற்கு பஞ்சாப் போன்ற மாநிலங்கள்" என்றார்
விலையை குறைத்தோம்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிப்பிட்டு பேசிய அவர், எரிபொருள் துறையில் அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரிகளை குறைக்கும் விவகாரத்தில் மாநிலங்களும் பொறுப்பேற்க வேண்டும், ரஷ்யா - உக்ரைன் மோதலால் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் அனைவருக்கும் தெரியும், நாம் இன்னும் தொற்றுநோயிலிருந்து மீளவில்லை, இன்னும் 80 கோடி மக்களுக்கு உணவளிக்கிறோம், தடுப்பூசிகளை அளித்து வருகிறோம். உக்ரைனில் ராணுவ நடவடிக்கை இருந்தது... எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19.56 அமெரிக்க டாலரிலிருந்து 130 டாலராக உயர்ந்தது... ஆனால் தீபாவளிக்கு முன்பு நாங்கள் அதைக் குறைத்தோம், விலைகள் குறைக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.
மாநில அரசுகள் மீது புகார்
"மோடி காலத்தில் எரிபொருள் விலை உயர்வு மிகக் குறைவு. இது 30 சதவிகிதம் மற்றும் 80 சதவிகிதம் அல்ல, பல தசாப்தங்களாக அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளது. அதனுடன், பல்வேறு பிரிவுகளின் கீழ் அரசாங்கம் இலவச திட்டங்களை வழங்குகிறது, "பாஜக அல்லாத மாநிலங்கள் செய்கிற வாட் வரியில் பாதியை பாஜக மாநிலங்கள் வசூலிக்கின்றன... பாஜக மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களுக்கு இடையே பெட்ரோல் சில்லறை விலையில் ரூ.15-ரூ.20 வித்தியாசம் உள்ளது," என்றும் அமைச்சர் பூரி கூறினார்.