17 + 25.. ஈரானிடம் அமெரிக்கா இழந்த போர் விமானங்கள் எத்தனை தெரியுமா? டிரம்புக்கு பேரதிர்ச்சி
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போரை தொடங்கின. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதில் அமெரிக்காவின் எஃப் 35, எஃப் 15 எஸ் உள்பட 17 போர் விமானங்களும், 25 அதிநவீன டிரோன்களும் இழந்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன. இதுபற்றிய முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் சிஆர்எஸ் (CRS or Congressional Research Service) உறுதி செய்துள்ளது. சிஆர்எஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம் (காங்கிரஸ்) எம்பிக்களுக்கு சட்டம் சார்ந்த கொள்கைள் மற்றும் பிற உதவிகளை வழங்கி வரும் அமைப்பாகும். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுக்கு முக்கிய தகவல்களை வழங்கி உதவி வரும் அமைப்பாக சிார்எஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சிஆர்எஸ் சார்பில் அமெரிக்கா - ஈரான் போர் குறித்து முக்கிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையின் (CENTCOM) அறிக்கைகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
''ஈரான் மீது அமெரிக்கா 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த ராணுவ நடவடிக்கையின் செலவு இப்போது 29 பில்லியன் அமெரிக்க டாலராக மாறி உள்ளது. இதனை சமீபத்தில் பென்டகன் அறிவித்து. சேதமடைந்த ராணுவ தளவாடங்களை சரிசெய்வது அல்லது மாற்றுவது உள்ளிட்டவை தான் இந்த செலவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்த ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா போர் விமானங்கள், ட்ரோன்களை இழந்துள்ளது. மொத்தம் 17 போர் விமானங்கள், 25 நவீன ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட விமானங்களின் பட்டியலில் நான்கு F-15E ஸ்ட்ரைக் ஈகிள், ஒரு F-35A லைட்னிங் II போர் விமானங்கள், ஒரு A-10 தண்டர்போல்ட் II தரைத் தாக்குதல் விமானம் மற்றும் ஏழு KC-135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அடங்கும்.
இதுதவிர E-3 சென்ட்ரி AWACS (வான்வழி தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விமானம்) விமானம், இரண்டு MC-130J கமாண்டோ II சிறப்புப் பணி விமானங்கள், ஒரு HH-60W ஜாலி கிரீன் II போர் மீட்பு ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 24 MQ-9 ரீப்பர் மற்றும் ஒரு MQ-4C ட்ரைடன் ட்ரோன் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன.
மேலும் அமெரிக்கா பாதுகாப்பு துறை இதுவரை ஏற்பட்ட இழப்புகள் பற்றி முழு மதிப்பீட்டை வெளியிடவில்லை. இதனால் இழப்புகள் இன்னும் கூட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. '' என கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''ஈரான் மீதான போர் தொடங்கி மாதங்கள் ஆன பிறகும், பல பில்லியன் மதிப்புள்ள டஜன் கணக்கான விமானங்களை இழந்ததாக அமெரிக்க காங்கிரஸே ஒப்புக்கொள்கிறது. எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள், F-35 விமானத்தை முதலில் சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது கிடைத்த அனுபவம், கற்றுக்கொண்ட பாடம் உள்ளிட்டவற்றின் மூலமாக போர் மீண்டும் வந்தால் இன்னும் பல ஆச்சரியங்கள் அமெரிக்காவிற்கு காத்திருக்கு'' என எச்சரிக்கை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications