கல்யாணத்துக்கு கூட புது தங்கம் வாங்காத இந்தியர்கள்.. சில மாதங்களில் நடந்த மாற்றம்! நன்றி சொன்ன மோடி
டெல்லி: மத்திய கிழக்கு போர் காரணமாகப் பொதுமக்கள் புதிய தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். தனது கோரிக்கையை ஏற்றுத் திருமணத்திற்குக் கூட புதிய தங்கத்தை வாங்குவதைப் பலர் தவிர்த்ததாகவும் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி இறுதியில் வெடித்த மோதல் பல மாதங்கள் தொடர்ந்தன. ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. பொதுவாகக் கச்சா எண்ணெய் என்பது டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாம் அதிகளவில் டாலரைக் கொடுக்க வேண்டியிருந்தது. இது இந்தியாவின் அந்நிய செலாவணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

தங்கம் வேண்டாம்
இதன் காரணமாக பிரதமர் மோடி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்திருந்தார். அதாவது பொதுமக்கள் தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், முடிந்தவரை வீட்டில் இருந்தே பணியாற்றுவது, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது, உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மோடி பெருமிதம்
இதற்கிடையே இன்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களின் இந்த மாற்றங்கள் குறித்த அனுபவங்களைப் பிரதமருடன் நேரடியாகப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இத்தனை காலம் தங்களின் சொந்த வாகனங்களில் பயணித்தவர்கள், இப்போது எரிபொருளைச் சேமிக்க கார் ஷேரிங் (Carpooling) முறையில் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், தங்கம் வாங்குவதைக் குறைக்கும் வேண்டுகோளை ஏற்று, பல குடும்பங்கள் தங்களது வீட்டுத் திருமணங்களுக்குப் புதிய தங்கம் வாங்குவதைத் தவிர்த்து, தங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய தங்க நகைகளை உருக்கிப் புதிய நகைகளாக மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தங்களது வெளிநாட்டுப் பயணங்களைத் தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
என்ன நடக்கிறது!
மறுபுறம் உலகளாவிய பொருளாதார சூழல்களால் அடுத்த சில வாரங்களுக்குத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்டவை தங்கத்தின் விலை குறையக் காரணமாக இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் காலங்களில் எப்படி இருக்கும்!
இது குறித்து கோடாக் நியோ நிறுவனத்தின் கமாடிட்டி ஆராய்ச்சிப் பிரிவின் ரிதேஷ்குமார் சாஹு கூறுகையில், "சர்வதேச சந்தையில் கடந்த வாரம் கடுமையாக சரிந்தது. இதனால் தங்கம் விலை உயரவில்லை. ஸ்பாட் தங்கம் தனது ஏழு மாதக் குறைந்தபட்ச அளவிலிருந்து சற்று மீண்டுள்ள போதிலும், அதன் ஒட்டுமொத்த டிரெண்ட் பலவீனமாகவே உள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க வேலைவாய்ப்பு டேட்டா உள்ளிட்டவையும் தங்கத்திற்கு எதிராக இருக்கிறது. மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலை குறையப் பிரதான காரணமாக இருக்கிறது" என்றார்.














Click it and Unblock the Notifications