பூமிக்கடியில் 60 அடி ஆழத்தில் ரோடு.. ஹெப்பால் டூ சில்க் போர்டு வரை.. பெங்களூர் டிராபிக்கிற்கு இனி குட்பை
பெங்களூர்: பெங்களூரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பூமிக்கடியில் 60 அடி ஆழத்தில் சுரங்கத்தில் ரோடு அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் டிகே சிவக்குமார் அடிக்கல் நாட்டி உள்ளார். ஹெப்பால் முதல் சில்க்போர்டு வரை இந்த சுரங்க ரோடு அமைக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் நடைபெற உள்ளன.
பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உலகளவில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு வெளியான TomTom Traffic Index டேட்டாப்படி பார்த்தால் உலகளவில் அதிகமான டிராபிக் இருக்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் சிட்டி இருந்தது. 2வது இடத்தில் பெங்களூரு இருந்தது.

பெங்களூரை எடுத்து கொண்டால் Rush Hour நேரத்தில் அதிகபட்சமான வேகம் 13.9 கிலோமீட்டர் எனவும், இந்த சமயத்தில் 10 கிலோமீட்டர் தொலைவை கடக்க 36 நிமிடங்கள் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் பெங்களூர் போக்குவரத்து நெரிசல் என்பது அங்குள்ள தொழிலதிபர்கள், ஐடி ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறிப்போய் உள்ளது.
பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் சுரங்கபாதை திட்டம். ஹெப்பாலில் இருந்து சில்க்போர்டு வரை மொத்தம் 18.2 கிலோமீட்டர் தொலைவுக்கு பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.17 ஆயிரம் கோடியில் வகுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் இருந்து 60 அடி ஆழத்தில் இந்த ரோடு 6 வழிப்பாதையாக அமைய உள்ளது. ஒவ்வொரு வழிப்பாதையும் 3.5 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் அடிக்கல் நாட்டினார். பூமிபூஜை போடப்பட்டுள்ளது, அதன்படி முதற்கட்டமாக ரூ.1,139 கோடி செலவில் ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் (University of Agricultural Sciences) வரை சுரங்கப்பாதை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த பணியை 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சரும், ஹெப்பால் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான பைரதி சுரேஷ் கூறுகையில், ''பெங்களூர் மேக்ரி சர்க்கிளில் இருந்து ஹெப்பால் ஜங்ஷன் வரை 2.18 கிலோமீட்டர் தொலைவுக்கு முதற்கட்டமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. மண்பரிசோதனை மேற்கொண்டுள்ளது. ஹெப்பால் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் பிற இடங்களுக்கு மக்கள் செல்வதில் பிரச்சனை உள்ளது. இதனால் சுரங்கப்பாதையாக ரோடு அமைக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications