யூடியூப் வீடியோ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் பரிதாப பலி.. திருப்பூர் அருகே ஷாக்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் வீடியோவின் உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், 2-வது குழந்தையை சுகப் பிரசவம் மூலம் பெற கணவர், மாமியாருடன் சேர்ந்து பெண், உயிரைப் பணயம் வைத்து முயற்சி எடுத்தது விசாரணையில் அம்பலமானது. பிறந்த குழந்தை அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. 2வது குழந்தையை சுகப் பிரசவம் மூலம் பெறுவதற்காக, கர்ப்பிணியான இவர் யூடியூப் வீடியோவைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
அவருக்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அதன் பிறகு கோவை தனியார் மருத்துவமனையில் சசிகலாவை கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் இளம்பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications